2010-11-20 15:18:57

இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் : உலகெங்கும் வன்முறைக்குப் பலியாகும் மக்களுடன் இத்தாலியத் திருச்சபை ஒருமைப்பாடு


நவ.20,2010. ஈராக்கிலும் உலகெங்கும் வன்முறைக்குப் பலியாகும் மக்களுடனான இத்தாலியக் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ.

எல்லாச் சுதந்திரங்களுக்கும் அடிப்படையாக அமைந்துள்ள சமய சுதந்திரம் அச்சுறுத்தப்படும் போது அதற்குப் பாராமுகமாய் இருக்கக் கூடாது என்று இத்தாலி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கர்தினால் பஞ்ஞாஸ்கோ.

தங்களது சொந்த நாட்டில் துன்புறுத்தப்படும் “ஈராக் கிறிஸ்தவர்களுடன் தோழமை நாள்” என்ற ஒரு நடவடிக்கையை ஊக்குவித்துள்ள கர்தினால் பஞ்ஞாஸ்கோ, கிறிஸ்து அரசர் பெருவிழாவான இஞ்ஞாயிறன்று இத்தாலியின் அனைத்துப் பங்குகளிலும் ஈராக் கிறிஸ்தவர்களுக்காகச் செபிக்குமாறு கேட்டுள்ளார்.

மேலும், திருப்பீட கீழை ரீதிப் பேராயம், இம்மாதம் 25ம் தேதி மாலை வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காவில் ஈராக்கில் பலியானக் கிறிஸ்தவர்களுக்கெனச் சிறப்புத் திருவழிபாட்டை நடத்தவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.