ஈராக் கிறிஸ்தவர்களின் பாதுகாப்பை நாடும் அமெரிக்க ஆயர்கள்.
நவ 16, 2010. ஈராக்கில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது குறித்து அமெரிக்க
ஐக்கிய நாட்டு அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அமெரிக்க ஆயர்கள், தங்களைத் தாங்களே
காத்துக்கொள்ள முடியா நிலையிலிருக்கும் மக்களைப் பாதுகாக்க அமெரிக்காவிற்கு இருக்கும்
கடமையை அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
ஈராக் நாட்டில் கடந்த 7 வருடங்களாக
இடம்பெற்றுவரும் பாதுகாப்பற்ற நிலைகள் மற்றும் கொடூர வன்முறைகளுக்கானச் சாட்சிகளாகக்
கிறிஸ்தவர்கள் மீதான அண்மைத் தாக்குதல்கள் உள்ளன என ஆயர்கள் சார்பில் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு
எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் ஃப்ரான்சிஸ் ஜார்ஜ்.
கொலை,
கடத்தல், வெடிகுண்டுத் தாக்குதல் மற்றும் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படுதல்
போன்ற துன்பங்களை ஈராக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அனுபவித்து வருவதாக ஈராக் ஆயர்கள் வழி
தெரிய வந்துள்ளதாகவும் கூறினார் கர்தினால்.
ஈராக்கில் மோதல்கள் ஓரளவிற்கு முடிவுக்கு
வந்துள்ள போதிலும், மக்களைக் காப்பாற்ற அமெரிக்க ஐக்கிய அரசு தவறியுள்ளது குறித்த கவலையையும்
அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் கர்தினால் ஃப்ரான்சிஸ் ஜார்ஜ்.