பிரேசில் தலத்திருச்சபையின் நற்செய்தி அறிவிப்பின் முக்கியத்துவம் குறித்து பாப்பிறை
நவ 15, 2010. பிரேசில் நாட்டின் தனித்தன்மையைக் கட்டியெழுப்புவதில் தலத்திருச்சபையின்
நற்செய்தி அறிவிப்பின் முக்கியத்துவம் குறித்து அந்நாட்டு ஆயர்களிடம் கோடிட்டுக் காட்டினார்
பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் அட் லிமினா சந்திப்பையொட்டி
உரோம் நகர் வந்திருந்த பிரேசில் ஆயர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய பாப்பிறை,
நற்செய்தி அறிவிப்புப் பணியில் கிறிஸ்தவர்களின் தனிப்பட்ட வாழ்வு சாட்சியங்களும் தேவைப்படுவதை
இன்றைய சமூகம் எதிர்பார்க்கின்றது என்றார்.
இன்றைய உலகின் சமூக, கலாச்சார மாற்றங்கள்
தரும் புதிய பிரச்னைகளுக்கு நேர்மையான தீர்வு காண உதவும் வண்ணம் மனிதர்களின் மனச்சான்றை
வழிநடத்திச் செல்லவேண்டியதன் அவசியத்தையும் ஆயர்களிடம் வலியுறுத்தினார் பாப்பிறை.
விசுவாசம்
மற்றும் ஒழுக்கரீதிகளை ஊக்குவித்து பாதுகாத்தல், திருவழிபாட்டுப் புத்தகங்களை மொழிபெயர்த்தல்,
தேவ அழைத்தல்களை ஊக்குவித்தல், மறைக்கல்வி போதகம், கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான அர்ப்பணம்,
மனித வாழ்வைப் பாதுகாத்தல், குடும்பம் மற்றும் திருமணத்தின் புனிதத்துவத்தைப் பாதுகாத்தல்,
குழந்தைகளுக்குக் கற்பிப்பதில் பெற்றோரின் கடமை, மத சுதந்திரம், மனித உரிமைகள், அமைதி,
நீதி போன்றவைகளில் ஆயர்களின் ஒன்றிணைந்த பணிகளையும் பிரேசில் ஆயர்களிடம் வலியுறுத்தினார்
திருத்தந்தை.