நவ.04,2010. மும்மொழிக் கல்வித் திட்டமும், மதக்கல்வியும் இலங்கையில் வளர்க்கப்பட வேண்டுமென
கொழும்புப் பேராயரும் அண்மையில் கர்தினாலாக நியமிக்கப்பட்டுள்ளவருமான மால்கம் ரஞ்சித்
கூறினார். இலங்கை அரசால் நிறுவப்பட்டுள்ள படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான
ஆணைக்குழுவின் முன்பாக இப்புதனன்று தன் கருத்துக்களைத் தொகுத்து வழங்கிய பேராயர் ரஞ்சித்,
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மக்கள் இன விகிதத்தை
மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளார். இலங்கையில் கடந்த 4 ஆண்டுகளில்
இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு கத்தோலிக்க குருக்கள் காணாமல் போயிருப்பதாக
இவ்வாணைக்குழுவின் முன் மட்டக்களப்பு ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கூறினார். இலங்கை
உள்நாட்டுப் போரின்போது, பல மக்கள் காணாமல் போனதாகவும், அவர்களில் 2006ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில்
ஒரு கத்தோலிக்க குருவும், 70 வயதான அருள்தந்தை ஜோசப் பிரான்ஸிஸ் அவர்களும் காணாமல் போனதாக
ஆயர் சுவாம்பிள்ளை கூறியுள்ளார்.27 ஆண்டுகளாக இலங்கையில் அமலில் இருக்கும் அவசரகாலச்
சட்டத்தை நீக்க வேண்டும் என்ற தங்கள் வேண்டுகோளையும் ஆயர்கள், குருக்கள் அடங்கிய இக்குழு,
படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் முன் வலியுறுத்தியுள்ளது.