2010-11-04 15:45:53

அமெரிக்க அரசுத் தலைவர் பாரக் ஒபாமா கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவார்


நவ.04,2010. வருகிற சனிக்கிழமை அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பாரக் ஒபாமா இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, தெற்கு மும்பையில் உள்ள Holy Name பள்ளி என்ற கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களுடன் ஞாயிறு காலை தீபாவளியைக் கொண்டாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் அனைத்து மாணவ, மாணவியரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனினும், பள்ளியில் உள்ள அனைவரும் அமெரிக்க அரசுத் தலைவரின் வருகை குறித்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று பள்ளியின் முதல்வர் அருள்தந்தை மைக்கில் பின்டோ கூறினார்.இந்தப் பள்ளி கிறிஸ்தவ நிறுவனம் என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டதா என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், இப்பள்ளியில் 60 விழுக்காட்டினர் இந்து மாணவர்கள், 35 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள் 5 விழுக்காட்டினரே கிறிஸ்தவர்கள் என்றுரைத்த அருள்தந்தை பின்டோ, தங்கள் பள்ளியின் கல்வித் தரம், கலைத் திறன் இவைகளின் அடிப்படையில் தாங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம் என்று தெளிவுபடுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.