மருத்துவத் துறையில் பணிபுரிவோர் இன்னும் உண்மையுடன் செயல்பட வேண்டும் - பேராயர் Zygmunt
Zimowski
நவ.03,2010. அனைத்துத் தொழில்களிலும் ஈடுபட்டுள்ளவர்கள் நேர்மையாக, மனசாட்சியின் குரலுக்குச்
செவிமடுத்துச் செயல்பட வேண்டும், சிறப்பாக மருத்துவத் துறையில் பணிபுரிவோர் இன்னும் உண்மையுடன்
செயல்பட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அண்மையில் அமெரிக்க
ஐக்கிய நாட்டில் நடைபெற்ற கத்தோலிக்க மருத்துவக் கழகத்தின் ஆண்டு கூட்டத்திற்கு, திருப்பீட
நலப்பணிக் குழுவின் தலைவரான பேராயர் Zygmunt Zimowski அனுப்பியச் செய்தியில் இவ்வாறு
கூறினார். இன்றைய உலகில் தொழில் துறைகளில் காணப்படும் ஈடுபாடின்மை பல தவறுகளுக்கு
அடிப்படையாக அமைகிறது, இந்த ஈடுபாடின்மை உயிர்களைப் பேணும் மருத்துவத் துறையிலும் வளர்ந்து
வருவது கவலைதரும் ஒரு போக்கு என்று பேராயர் கூறினார்.இறைவனின் சாயலாகப் படைக்கப்பட்டுள்ள
மனிதர்கள் படைப்பின் பாதுகாவலர்கள் என்ற தகுதியையும் பெற்றுள்ளதால், உயிர்களைப் பேணும்
பணியில் நாம் இன்னும் அதிகக் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று பேராயர் Zimowski தன்
செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.