திருத்தந்தை 16ம் பெனடிக்ட், குரொவேசியா நாட்டில் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நவ 02, 2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வரும் ஆண்டு குரொவேசியா நாட்டில் திருப்பயணம்
மேற்கொள்வதற்கு அரசால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு திருப்பீடத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக
அறிவித்தார் குரோவேசிய கர்தினால் யோசிப் பொஸானிச்.
குரோவேசிய அரசுத்தலைவர் இவோ
யோசிபோவிச்சுக்கும் கர்தினால் பொஸானிச்சுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து
இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஆண்டு திருத்தந்தை குரோவேசியாவில் பயணம்
மேற்கொள்ள இருப்பது குறித்து அந்நாட்டின் IKA என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த
அரசுத்தலைவர், இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க அரசு மற்றும் திருச்சபை அதிகாரிகளைக் கொண்ட
குழு ஒன்றை அமைக்க உள்ளதாகவும் கூறினார்.
தன் திருப்பயணத்தின்போது திருத்தந்தை,
Zagrebன் முன்னாள் பேராயர் முத்திப்பேறுபெற்ற அலோசியஸ் ஸ்தெபினாக்கின் கல்லறையைத் தரிசிப்பார்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
குரோவேசிய நாட்டில் மும்முறை திருப்பயணம் மேற்கொண்டுள்ளார். திருத்தந்தை 16ம் பெனடிக்ட்,
பாப்பிறையாக இந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவிருப்பது இதுவே முதன் முறையாகும்.