கத்தார் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 52 இந்திய மீனவர்களின் விடுதலைக்கென இந்திய அரசின்
உதவியை நாடியுள்ளார் கோட்டாறு ஆயர்
நவம்பர் 1, 2010 - கத்தார் நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள 52 இந்திய மீனவர்களின் விடுதலையைப்
பெற்றுத்தர வேண்டும் என்ற விண்ணப்பத்தை வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் விவகாரங்களுக்கான
அமைச்சர் வயலார் ரவியைச் சந்தித்து வழங்கினார் கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்.
இந்திய
ஆயர் பேரவையின் தொழிலாளர்களுக்கான அமைப்பின் உயர் செயலர் குரு ஜோஸ் வட்டக்குழியுடன் சென்ற
ஆயர் ரெமிஜியுஸைச் சந்தித்து அவ்விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் ரவி, அவர்களின்
விடுதலைக்காக இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் ஆற்றும் என்ற உறுதியை வழங்கியதுடன் ஏழை
மீனவர்களை இந்தியாவிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றார்.
கோட்டாறு
மறைமாவட்டத்தின் கடியப்பட்டிணம் என்ற ஊரிலிருந்து சவுதி அரேபியாவில் பணியாற்றச் சென்ற
42 மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, கவனக்குறைவாக கத்தார் கடல்
எல்லையில் நுழைந்ததைத் தொடர்ந்து கத்தார் காவல் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த வாரத்தில்
இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர்.