இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் மீட்கவே விரும்புகிறார் – திருத்தந்தை
நவம்பர் 1, 2010 - இறைவன் அனைத்து ஆன்மாக்களையும் மீட்கவே விரும்புகிறார், குறிப்பாக
காணாமற்போன ஆன்மாக்களை திரும்பப் பெற அவர் வெகு ஆவலாய் இருக்கிறார் என இஞ்ஞாயிறு மூவேளை
ஜெப உரையின் போது குறிப்பிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
ஏழை பணக்காரன் என்ற
எவ்விதப் பாகுபாடும் பார்க்காமல் அனைவரையும் அணைத்துக் கொள்ளவே இறைவன் விரும்புகிறார்
என்ற பாப்பிறை, மனிதர்களின் பாகுபாட்டு நிலை மற்றும் முன்சார்பு எண்ணங்கள் போல் இறைவன்
செயல்படுவதில்லை, மாறாக அவர் அனைத்து ஆன்மாக்களையும் நாடியே எப்போதும் உள்ளார் எனக் கூறினார்.
மனித
உரு எடுத்த இறைவனாம் கிறிஸ்துவும் தன் அபரிமிதமான இரக்கத்தை வெளிப்படுத்தி, ஒவ்வொரு பாவியும்
மனந்திருந்தி மீட்பைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கி வருகிறார் என்றும் கூறிய திருத்தந்தை,
இஞ்ஞாயிறு வாசகத்தில் காணப்பட்ட ஜெரிக்கோ நகர சக்கேயுவின் மீட்பிற்கான ஆவலை இயேசு நிறைவேற்றி
வைத்ததையும் சுட்டிக்காட்டினார்.