வத்திக்கானிலிருந்து வரும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அக். 28, 2010 - தீபாவளியைக் கொண்டாடும் அனைவரையும் நாம் வாழ்த்துகிறோம். ஒளியாம் இறைவன்
உங்கள் எண்ணங்களையும், உள்ளங்களையும் நிரப்பி, உங்களிடையே நிலவும் மனித உறவுகளை உறுதிபடுத்துவாராக
என்று வத்திக்கானிலிருந்து இவ்விழாயனன்று வாழ்த்துக்கள் வெளி வந்துள்ளன. திருப்பீடத்தின்
மதங்களுக்கிடையேயான உரையாடல் அவையின் தலைவரான கர்தினால் Jean Louis Tauran, இவ்வியாழனன்று
வெளியிட்ட ஒரு செய்தியில், வருகிற நவம்பர் ஐந்தாம் தேதி தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும்
தன் வாழ்த்துக்களைத் தெரிவித்து செய்தி வழங்கியுள்ளார். ஒவ்வொரு தனி மனிதரும் மதிப்பிற்குரியவர்
என்பதால், மதங்களுக்கு இடையேயான உறவுகளில் இந்த மதிப்பு போற்றப்பட வேண்டும் என்றும்,
ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினர் மீது காட்டும் நம்பிக்கையே இந்த மதிப்பை வளர்க்கும்
என்றும் கர்தினால் Tauran தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.மதங்களுக்கிடையேயான உரையாடல்
மதிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் வேளையில் உறவுகள் வலுப்பெறுவதும் மனித சமுதாயத்தின்
துயரங்கள் தீர்க்கப்படுவதும் சாத்தியமாகிறது என்று திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1986ம்
ஆண்டு இந்தியாவுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தின் போது கூறியதைச் சுட்டிக் காட்டியுள்ள
கர்தினால் Tauran, அனைத்து மதங்களும் இணைந்து மனித சமூகத்தை உயர்த்த பாடு படவேண்டுமென்று
தன் தீபாவளிச் செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.