உலக அமைதிக்கான நொபெல் பரிசை வென்றுள்ள Liu Xiaoboவை விடுவிக்க உலகத்
தலைவர்கள் முயற்சி
அக்.27, 2010 - டிசம்பர் 10ம் தேதி Osloவில் வழங்கப்படும் உலக அமைதிக்கான நொபெல் பரிசைச்
சீனச் சிறையில் உள்ள Liu Xiaoboவின் சார்பில் பெற்றுக் கொள்ள அவரது நண்பர்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளார், Liu வின் மனைவி Liu Xia. சீனாவில் மக்களாட்சியை வலியுறுத்தி எழுதி
வந்த Liu Xiaobo, மக்கள் மத்தியில் அமைதியைக் குலைப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, சீன
அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியும் சீன அரசால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் உலக அமைதிக்கான நொபெல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். Osloவில்
டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் செல்ல முடியாத
நிலையில், அப்பரிசினை Liuவின் சார்பில் பெற, சீன அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து, தற்போது
நாட்டை விட்டு வெளியேறி வாழும் Liuவின் நண்பர்களுக்கு Liuவின் மனைவி இணையதளத்தின் மூலம்
கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதற்கிடையே, பெய்ஜிங் சிறையில் உள்ள Liuவை விடுவிக்க
சீன அரசை வற்புறுத்தச் சொல்லி G20 தலைவர்களுக்கு நொபெல் பரிசு பெற்ற 15 பேர் இணைந்து
கையொப்பமிட்ட ஒரு விண்ணப்பக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதென்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.Freedom
Now என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ள இக்கடிதத்தில், முன்னாள் அமெரிக்க அரசுத் தலைவர்
Jimmy Carter, Dalai Lama, முன்னாள் தென்னாப்ரிக்க அரசுத் தலைவர் Fredrik de Klerk, இரான்
நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் Shirin Ebadi ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.