தாய்லாந்தின் பேங்காக்கில், சாலைப்பயணிகளுக்கான மேய்ப்புப்பணி அக்கறை குறித்த திருச்சபை
கூட்டம்
அக். 19, 2010. ஆசியா மற்றும் ஓசியானியாவின் சாலைப்பயணிகளுக்கான மேய்ப்புப்பணி அக்கறை
குறித்தத் திருச்சபை கூட்டம் இச்செவ்வாய் முதல் தாய்லாந்தின் பேங்காக்கில் இடம்பெற்று
வருகிறது.
குடிபெயர்வோர் மற்றும் பயணிகளுக்கானத் திருப்பீட அவை ஏற்பாடு செய்து
இச்சனிக்கிழமை வரை தொடரும் இக்கூட்டத்தில் 18 நாடுகளைச்சேர்ந்த 55 பேர் கலந்துகொள்கின்றனர்.
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் உதவியுடன் இது இடம்பெற்று வருகின்றது. ஆசியா மற்றும்
பசிபிக் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் 7 இலட்சம் பேர் வரை சாலை விபத்துகளில் உயிரிழப்பதாகக்
கூறும் திருப்பீட அவை, ஒவ்வோர் ஆண்டும் உலகில் 13இலட்சம் பேர் வரை சாலை விபத்துகளில்
உயிரிழப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பில் தன் அக்கறையை
வெளிப்படுத்தும் விதமாக, குடிபெயர்வோர் மற்றும் பயணிகளுக்கானத் திருப்பீட அவை 2008ம்
ஆண்டில் இலத்தீன் அமெரிக்காவிற்கென கொலம்பியாவின் பொகோட்டாவிலும், 2009ல் ஐரோப்பாவிற்கென
உரோம் நகரிலும் இத்தகையக் கூட்டங்களை நடத்தியுள்ளது. வரும் ஆண்டில் ஆப்ரிக்கா மற்றும்
மடகாஸ்கருக்கெனக் கூட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.