அண்மையில் உலகத்தின்
கவனத்தை ஈர்த்த ஒரு அற்புத நிகழ்ச்சி இது. அக்டோபர் 12 செவ்வாய் நள்ளிரவு. சிலே நாட்டில்
மக்கள் தூங்காமல் விழித்திருந்தனர். நள்ளிரவு தாண்டி பத்து நிமிடங்களில், அந்த நாடே மகிழ்ச்சி
ஆரவாரத்தில் வெடித்தது. சிலே நாட்டின் Atacama என்ற பகுதியில் பாறையில் செய்யப்பட்ட
ஒரு துளை வழியே, குழாய் வடிவக் கருவி ஒன்று வெளியே வந்தது. அந்தக் குழாயிலிருந்து Florencio
Avalos என்ற 31 வயது இளைஞர் வெளியேறினார். கண்ணீருடன் ஓடி வந்த அவரது 7 வயது மகன் Bairo
வையும், தன் மனைவியையும் கட்டி அணைத்து முத்தமிட்டார். இந்தக் காட்சியைக் கண்டு பலரது
கண்களில் ஆனந்த கண்ணீர். நாடே மகிழ்ச்சி ஆரவாரத்தில் அதிர்ந்தது. சரியாக 41 ஆண்டுகளுக்கு
முன் 1969, ஜூலை 20ம் தேதி நீல் ஆம்ஸ்ட்ராங் என்ற அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் காலடி
வைத்தபோது உலகமெங்கும் உண்டான மகிழ்ச்சி ஆரவாரத்தை ஒத்திருந்தது இந்த நிகழ்வு. நிலவில்
காலடி எடுத்து வைத்ததைப் போல் அவ்வளவு பெரிய சாதனையா இது? ஆம் அன்பர்களே. பூமியை விட்டு
மேலெழும்பி வெண்ணிலவில் அடியெடுத்து வைத்தது ஒரு பெரும் சாதனைதான். அதே போல், பூமிக்கடியில்
ஏறத்தாழ எழுபது நாட்கள் புதையுண்டிருந்த 33 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரோடு மீட்கப்பட்டனர்
என்பதும் ஒரு சாதனைதான். சிலே நாட்டுச் சாதனை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம்.
இருந்தாலும் அவற்றின் ஒரு சில விவரங்களை மீண்டும் அசைபோட உங்களை அழைக்கிறேன். இவ்வாண்டு
ஆகஸ்ட் 5ம் தேதி சிலே நாட்டில் Atacama பகுதியில் 2500 அடி ஆழத்தில் தாமிர, மற்றும் தங்கச்
சுரங்கம் ஒன்றில் 33 தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட
ஒரு நிலச்சரிவால் ஏழு லட்சம் டன் பாறைகள் சுரங்கப் பாதையை அடைத்து விட்டன. அதாவது, இந்த
33 தொழிலாளர்களும் நிலத்திற்கடியில் அரைமைல் தூரத்தில் உயிரோடு புதைக்கப்பட்டனர். போராட்டம்
ஆரம்பமானது. அவர்களைக் கண்டுபிடிக்க எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளும் தோற்றுப் போயின.
17 நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 22ம் தேதி அவர்கள் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையே ஒரு புதுமை என்று பலர் கூறினர். இவ்வாண்டு ஜனவரியில் ஹெயிட்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப்
பின் மீட்புப் பணி நேரத்தில் இது போன்ற அற்புதமான நிகழ்வுகளைக் கேள்விப்பட்டோம். 16 நாட்கள்
கழித்து மீட்கப்பட்ட Darline Etienne, 27 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட Evans Monsigrace
இவர்கள் எல்லாம் இந்தப் புதுமைப் பட்டியலில் முதலிடங்களை வகிப்பவர்கள். உயிரோடு புதைக்கப்பட்ட
33 சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த முயற்சிகளின் பலனாக,
அக்டோபர் 14 அதிகாலையில் 33 தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிகழ்வை இவ்வளவு
விவரமாகக் கூறுவதற்குக் காரணம் இன்றைய ஞாயிறு வாசகங்களே.
ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த
இந்த விபத்து உலகின் கவனத்தைப் பல வழிகளில் ஈர்த்தது. அதிலும் முக்கியமாக, 17 நாட்கள்
கழித்து 33 தொழிலாளர்களும் உயிரோடு பூமிக்கடியில் புதைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்த
பிறகு, உலகமே இந்த நிகழ்வைத் தொடர்ந்து கவனித்தது. உயிரோடு புதைக்கப்பட்ட இத்தொழிலாளர்களுக்கு
உதவிகள் பல வழிகளில் அனுப்பப்பட்டன. உடல் அளவில் அவர்களுக்குச் செய்யப்பட்ட உதவிகளை விட,
அவர்கள் உள்ளத்தில் நம்பிக்கையை வளர்க்க வழங்கப்பட்ட ஆன்மீக உதவிகள், செப உதவிகள் ஏராளம்.
செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் கைப்பட ஆசீர்வதித்த
செபமாலைகளை இத்தொழிலாளர்களுக்கு அனுப்பி வைத்தார். இத்தொழிலாளர்கள் தாங்கள் அடைபட்டிருந்த
இடத்தில் சிறு பீடம் ஒன்றை அமைத்து, செபித்து வந்தனர் என்று செய்திகள் கூறுகின்றன. இதைக்
கேள்விப்பட்ட பொது, என் எண்ணங்கள் பழங்கால உரோமைக்கும் இன்னும் பிற நாடுகளுக்கும் சென்றன.
அங்கு, அரசுக்குத் தெரியாமல் பூமிக்கடியில், அல்லது பல மறைவிடங்களில் கூடி வந்து செபித்த
கிறிஸ்தவர்களை எண்ணிப் பார்த்தேன். இந்த 33 தொழிலாளர்களையும் மீட்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட
அந்தக் கருவியின் பெயர் Phoenix. சாம்பலாகி ஒன்றுமில்லாமல் போய்விடும் Phoenix என்ற பறவை
மீண்டும் சாம்பலிலிருந்து உயிர் பெற்று வரும் என்ற புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு
இந்தப் பெயர் சூட்டப்பட்டது. இந்த மீட்புப் பணிக்கு சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாவலராகிய
புனித இலாரன்ஸ் பெயர் சூட்டப்பட்டது. புனித இலாரன்ஸ் திரு உருவைத் தாங்கி செப ஊர்வலங்கள்
இச்சுரங்கப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அக்டோபர் 12 முதல் சிலே நாட்டின் பல கோவில்களில்
தொடர் செபவழிபாடுகள், முழு இரவு விழிப்புச் செபங்கள், உண்ணா நோன்பு என்ற பல ஆன்மீக முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இந்த சாதனை முடிந்ததும், அந்நாட்டின் ஆயர் ஒருவர் கூறிய வார்த்தைகள்
இவை: "இன்று சிலே நாடு உயிர்ப்பின் மகிமைக்குச் சான்று பகர்ந்துள்ளது."
கடுகளவு
விசுவாசம் இருந்தால், அந்த விசுவாசத்துடன் செபங்கள் எழுப்பப்பட்டால், மலைகள் பெயர்ந்து
விடும், மரங்கள் வேருடன் எடுக்கப்பட்டு, கடலில் நடப்படும். எரிக்கோவின் மதில்கள் இடிந்து
விழும் என்றெல்லாம் நம்பிக்கை தரும் சொற்கள் விவிலியத்தில் உள்ளன. செபத்தின் வல்லமையால்
இஸ்ரயேலர்கள் போரில் வெற்றி கொள்வதை விடுதலைப் பயண நூல் இன்றைய முதல் வாசகத்தில் நமக்குக்
கூறுகிறது. மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பல நாடுகளுக்கும் சிம்மச் சொப்பனமாக இருந்தவர்கள்
அமலேக்கியர்கள். அவர்களை எதிர்க்க யாருக்கும் துணிவு இல்லை. அவர்கள் இஸ்ரயேலர்களுக்கு
எதிராகப் போர் தொடுக்க வந்தனர். இந்தச் செய்தியே இஸ்ரயேலரின் நம்பிக்கையைக் குலைத்து,
அவர்களது தோல்வியை உறுதி செய்திருக்க வேண்டும். ஆனால், மோசேயின் செபம் அவர்களை வெற்றியடையச்
செய்தது. விடுதலைப் பயண நூலில் சொல்லப்பட்டுள்ள வரிகள் இவை: விடுதலைப்பயணம் 17
8-13 பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர்...
மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்: அவர் தம் கையைத்
தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது
அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க, அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை
ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக, அவர் கைகள் கதிரவன்
மறையும் வரை ஒரே நிலையில் இருந்தன. யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி
முறியடித்தார்.
விடுதலைப் பயண நூல், லூக்கா நற்செய்தி இரண்டும் இன்று சொல்லித்
தரும் பாடம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது. தொடர்ந்து செபியுங்கள், தளராது செபியுங்கள்,
உடல் வலிமை, மன உறுதி இவை குலைந்தாலும், பிறர் உங்களைத் தாங்கிப் பிடிக்க, தொடர்ந்து
செபியுங்கள். அதுவும் மூடப்பட்டக் கதவுக்கு முன் முழந்தாள் படியிட்டு, அந்த முழந்தாள்
காப்புக் காய்த்து கடினமாகும் வரை வேண்டுங்கள். இதுதான் நமக்குத் தரப்படும் பாடம், சவால்
நிறைந்த ஒரு பாடம். இவ்வாண்டு ஜூலை மாதம் 17வது பொதுக்கால ஞாயிறன்று செபிக்கக் கற்றுத்
தரும்படி தன்னிடம் கேட்ட சீடர்களுக்கு இயேசு கூறிய உவமை நினைவிலிருக்கலாம். லூக்கா
நற்செய்தி 11: 1-13ல் இரவென்றும் பகலென்றும் பாராமல் செபிக்க வேண்டும்
என்பதைச் சொல்வதற்கு, தன் நண்பன் வீட்டை இரவில் தட்டி உணவு கேட்கும் ஒருவரைப் பற்றிய
உவமையைச் சொன்னார் இயேசு. இன்று லூக்கா நற்செய்தி 18: 1-8ல்
சொல்லப்பட்டுள்ள உவமையும் செபத்தைக் குறித்து ஒரு தெளிவான பாடம், ஒரு சவால். ”அவர்கள்
மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார்”
என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. ஊழலில் ஊறிப் போன நடுவரிடம் கைம்பெண்
ஒருவர் நீதி பெறுகிறார், இலஞ்சம் கொடுத்துப் பெறவேண்டியதை, இலட்சிய வெறி கொண்டு பெறுகிறார்.
நல்லது கெட்டது என்பதையெல்லாம் பார்க்க மறுத்துப் பாறையாகிப் போன நடுவரின் மனதைத் தன்
தொடர்ந்த செப முயற்சிகளால் தகர்த்து விடுகிறார் அந்தக் கைம்பெண். இவ்விரு உவமைகளிலும்
செபத்தைப் பற்றி பெரும் உயர்ந்த தத்துவங்களைச் சொல்லாமல், வெகு எளிதான வாழ்க்கை நிகழ்வுகளைக்
கூறியுள்ளார் இயேசு. செபம் வெறும் அறிவு வாதங்களாய் இல்லாமல், வாழ்வின் ஒரு பகுதியாக
வேண்டும் என்று இதை விடத் தெளிவாகச் சொல்ல முடியாது. இல்லையா?
செபத்தைக் குறித்து,
செபிப்பதைக் குறித்து பல நூறு கதைகள் உள்ளன. நான் வாசித்து என் மனதில் இடம் பெற்ற ஒரு
கதை இது: செபம் எவ்வளவு கனமானது? இது கதையின் தலைப்பு. ஏழைப் பெண் ஒருவர் மளிகைக்
கடைக்குச் சென்றார். பசியில் வாடும் தன் ஏழு குழந்தைகளுக்கு உணவு சமைக்க மளிகைக் கடைக்காரரிடம்
கடனுக்குப் பொருட்கள் தரும்படி கேட்டார். கடைக்காரர் மறுத்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த
வேறொருவர், "அந்தப் பெண்ணுக்கு வேண்டியதைக் கொடுங்கள். நான் பணம் தருகிறேன்." என்று உதவி
செய்ய முன் வந்தார். வேண்டா வெறுப்புடன் கடைக் காரர் அந்தப் பெண்ணிடம், "ம். என்னென்ன
வேண்டும்? பட்டியல் எதுவும் உள்ளதா?" என்று கொஞ்சம் ஏளனமாய்க் கேட்டார். அந்தப் பெண்
ஒரு காகிதத்தை எடுத்து, சிறிது நேரம் கண்களை மூடி செபித்தார். பின்னர் அந்தக் காகிதத்தில்
எதையோ எழுதி கடைக்காரரிடம் கொடுத்தார். அதை வாங்கிப் படித்தக் கடைக்காரர் இன்னும் ஏளனமாய்ச்
சிரித்தார். "இறைவா, என் குடும்பத்தின் தேவைகளை நீர் அறிவீர். அவைகளை மட்டும் எனக்குத்
தாரும். நீர் தருவதை நான் வாங்கிச் செல்வேன்." என்று அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது.
அதைப் படித்தக் கடைக் காரர் மனதில் அந்தப் பெண்ணை இன்னும் அவமானப் படுத்தும் எண்ணம் எழுந்தது.
"சரி, இந்தக் காகிதத்தைத் தராசில் வைக்கிறேன். அந்தக் காகித கனத்திற்குச் சமமானப் பொருட்களை
நீ பெற்றுக் கொள்ளலாம்." என்று கடைக்காரர் கூறினார். அந்தக் காகிதத்தை அவர் தராசில்
வைத்ததும், தராசின் முள் காகிதத் துண்டு வைக்கப்பட்ட பக்கம் முற்றிலும் சாய்ந்து நின்றது.
இதைக் கண்ட கடைக்காரருக்கு அதிர்ச்சி. மறுபக்கத் தட்டில் அவர் பொருட்களை வைக்க ஆரம்பித்தார்.
எவ்வளவு பொருட்கள் வைத்தாலும் காகிதம் இருந்த பக்கமே தராசு சாய்ந்திருந்தது. எதிர்பக்க
தட்டு முழுவதும் நிறைந்ததும், அந்தப் பொருட்களை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்
கடைக்காரர். அவைகளை நன்றியோடு பெற்றுக் கொண்டார் அந்தப் பெண். அருகில் இருந்தவர் அந்தப்
பொருள்களுக்கு உரிய தொகையைச் செலுத்தினார். தான் கண்ட புதுமைக்கு இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும்
தரலாம் என்று அவர் கூறினார். அந்தப் பெண் சென்றபின், தராசைப் பார்த்த கடைக்காரர் அது
பழுதடைந்திருப்பதை உணர்ந்தார். செபம் எவ்வளவு கனமானது என்பது கடவுளுக்கு மட்டுமே
தெரியும். செபத்தைக் குறித்து, செபிப்பதைக் குறித்து நமது எண்ணங்களை தெளிவுபடுத்த, உள்ளங்களை
உறுதிபடுத்த, செபம் நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற இறைவனிடம் செபிப்போம்.