அக்.15,2010. உலக உணவு நாளை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.பொதுச் செயலர், உலகில்
பசியாய் இருப்போரின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கும் நடவடிக்கையில் மேலும் அதிக ஒத்துழைப்புகள்
கிடைத்தால் இந்த முயற்சியில் முன்னேற்றம் காண முடியும் என்று கூறியுள்ளார்.
உலகில்
பசியாய் இருந்த நூறு கோடிக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கைக் கடந்த ஆண்டில் குறைக்கப்பட்டிருந்தாலும்,
இன்னும் உலகில் 92 கோடியே 25 இலட்சம் பேர் பசியாய் இருக்கின்றனர் என்று பான் கி மூன்
குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலகில் பலருக்கு இந்த உலக உணவு தினம், உணவற்ற தினமாக
அமைந்துள்ளது என்று கவலை தெரிவித்துள்ள அவர், பசியைப் போக்குவது, எல்லா மில்லென்னிய இலக்குகளை
அடைவதற்குத் தூணாக இருக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
“பசியை அகற்றுவதற்கு ஒன்றிணைதல்”
என்ற தலைப்பில் இவ்வாண்டு உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள
பான் கி மூன், உணவு மற்றும் நிதி நெருக்கடிகள் உலகின் மிகவும் நலிந்த மக்களை மிகவும்
பாதிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்திய உணவுக் கழக கிடங்குகளில்
சுமார் 180 இலட்சம் டன் உணவுத் தானியங்கள் யாருக்கும் பயனின்றி வீணாகும் நிலையில் இருப்பதாக
பா.ஜ.க செயலர் கிரித் சோமையா குற்றம் சாட்டியுள்ளார்