அக்.04, 2010 இந்தியாவில் 19-வது காமன்வெல்த் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி
நகரில் கோலாகலமாகத் துவங்கியிருக்கின்றன.
வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவார உற்சாகத்துக்கிடையே,
இங்கிலாந்து ராணியின் சார்பில் இளவரசர் சார்ல்ஸும் மற்றும் இந்தியக் குடியரசுத் தலைவர்
பிரதிபா பாடீலும் கூட்டாக போட்டிகளைத் துவக்கி வைத்தார்கள்.
இந்தியப்
பிரதமர் மன்மோகன் சிங், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத் தலைவர் மைக் ஃபெனல், பன்னாட்டுத்
தூதர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்ற இந்த விழாவில், இங்கிலாந்து ராணியின் செய்தியை
இளவரசர் சார்ல்ஸ் வாசித்தார். 'இதுபோன்று அனைத்து நாடுகளும் சேர்ந்து விளையாட்டுப் போட்டிகளை
நடத்துவது போல், எல்லா நாடுகளும் இணைந்து உலக அமைதிக்குப் பாடுபட முடியும் என்று உறுதியாக
நம்புகிறேன்’ என்று இளவரசர் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
அதேபோல், இந்தியக்
குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பேசும்போது, இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும்
இந்த உலகுக்குப் பறைசாற்ற இது சரியான தருணம் என்று குறிப்பிட்டார். பிரதமர் மன்மோகன்
சிங் பேசும்போது, இந்தப் போட்டியை நடத்துவது இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமை தரக்கூடிய
தருணம் என்று தெரிவித்தார்.
இதுவரை காமன்வெல்த் போட்டி வரலாற்றில் இல்லாத
அளவுக்கு இந்தப் போட்டியில்தான் அதிகபட்ச வீரர்கள், அதாவது, சுமார் 7 ஆயிரம் வீரர்கள்
மற்றும் வீராங்கனைகள் 71 நாடுகளில் இருந்து பங்கேற்கிறார்கள்.
இந்தப்
போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நேரத்தில், இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் வெளியான
எதிர்மறையான செய்திகள், இந்தப் போட்டிகள் தொடர்பாக பல சந்தேகங்களை ஏற்படுத்தின. சுகாதாரம்,
பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களாலும், வேறு பல காரணங்களாலும் உசைன் போல்ட் உள்ளிட்ட நட்சத்திர
வீரர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க இயலாது என அறிவித்துவிட்டார்கள்.
ஆனால்,
இறுதிக்கட்ட முயற்சியாக இந்திய அதிகாரிகளும் காமன்வெல்த் ஏற்பாட்டாளர்களும் எடுத்த நடவடிக்கைகள்
நல்ல பலனைக் கொடுத்திருக்கின்றன. வீரர்கள் தங்கும் குடியிருப்புக்கள் தயார் நிலைக்குக்
கொண்டுவரப்பட்டுவிட்டன. அவற்றின் தரம் குறி்த்து, சர்வதேச அணிகளின் நிர்வாகிகளும் வீரர்களும்
திருப்தி தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில், இந்திய அணி அதிகபட்சமாக 619 வீரர்
மற்றும் வீராங்கனைகளைக் களமிறக்குகிறது.