திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 2011ல் சான் மரினோ குடியரசுக்குத் திருப்பயணம் மேற்கொள்கிறார்
அக்.02,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வருகிற ஜூன் மாதத்தில் சான் மரினோ-மொந்தேஃபெல்த்ரோ
மறைமாவட்டத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்வார் என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் இவ்வெள்ளியன்று
அறிவித்தது.
இத்திருப்பயணம் சான் மரினோ குடியரசுக்கு மட்டுமல்லாமல், இத்தாலியப்
பகுதியிலுள்ள மொந்தேஃபெல்த்ரோவையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று திருப்பீட பத்திரிகை
அலுவலகத்தின் அருள்திரு சீரோ பெனதெத்தினி தெரிவித்தார்.
2011ம் ஆண்டு ஜூன் 19ம்
தேதி காலை சான் மரினோ செல்லும் திருத்தந்தை பிற்பகலில் மொந்தேஃபெல்த்ரோ பகுதிக்குச் செல்வார்
என்று அக்குரு அறிவித்தார்.
சான் மரினோ குடியரசின் எல்லைப் பகுதியிலுள்ள மொந்தேஃபெல்த்ரோ
மறைமாவட்டம் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இதிலுள்ள 69 பங்குகள் இத்தாலியையும்
12 பங்குகள் சான் மரினோவையும் சேர்ந்தவை.
திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் 1982ம்
ஆண்டு ஆகஸ்டில் சான் மரினோ குடியரசுக்கு மேய்ப்புப்பணித் திருப்பயணம் மேற்கொண்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.