முத்திப்பேறு பெற்ற கியாரா பதானோவின் பெற்றோரைத் திருத்தந்தை சந்தித்தார்
செப்.30,2010. இத்தாலியில் அண்மையில் முத்திப்பேறு பெற்றவராக உயர்த்தப்பட்ட கியாரா பதானோவின்
பெற்றோரை இப்புதன் பொது மறைப் போதகத்திற்குப் பிறகு திருத்தந்தை சந்தித்தார். தங்கள்
மகளுக்கு இந்தப் பெருமையை அளித்தத் திருத்தந்தைக்கு நன்றி சொல்லக் காத்திருந்த மரிய தெரேசா,
Ruggero பதானோ இருவரையும் திருத்தந்தை சந்தித்த போது, அவர்கள் இருவருக்கும் திருத்தந்தை
நன்றி சொன்னார்.தங்களது மகள் பிறப்பையும், அவள் அடைந்த துயர்களையும் நினைவு கூர்ந்த
பெற்றோர், இப்போது தங்கள் மகள் இன்னும் அதிகமாகத் தங்களுடன் இணைந்திருப்பதைத் தாங்கள்
உணர்வதாகக் கூறினர். கன்னி மரியாவுக்குத் தன்னையே அர்ப்பணிப்பதாய் கியாரா பதானோ தன் கைப்பட
எழுதி, கையொப்பமிட்ட ஒரு அட்டையை பதானோவின் பெற்றோர் திருத்தந்தையிடம் அளித்தனர்.