ஏழைநாடுகளுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளும் கடமையும் பணக்கார நாடுகளுக்கு அதிகமாக உள்ளன
என்கிறார் திருப்பீடப் பேச்சாளர்.
செப். 27, 2010. உலக அளவிலான பெரும் பொருளாதர நெருக்கடிகள் இருக்கின்ற போதிலும் ஏழை
நாடுகளுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளும் கடமையும் பணக்கார நாடுகளுக்கு அதிகமாக உள்ளன என்றார்
திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.
ஒவ்வொரு வாரமும்
வத்திக்கான் தொலைக்காட்சியில் இடம்பெறும் 'Octava Dies' என்ற நிகழ்ச்சியில் இவ்வாரம்
இக்கருத்துக்களை வெளியிட்ட குரு லொம்பார்தி, நிதி நெருக்கடிகளால் மூழ்கவிருந்த பெரும்
நிதி நிறுவனங்களை நிதி ஒதுக்கி காப்பாற்ற முடிந்த அரசுகளால், ஏழை மக்களை பசி மற்றும்
வறுமையிலிருந்து காப்பாற்ற முடியாமற் போனது எவ்வாறு என்ற கேள்வியை எழுப்பினார்.
கடந்த
வாரத்தின், மில்லென்னிய வளர்ச்சித் திட்டங்கள் பற்றியக் கருத்தரங்கு குறித்தும் எடுத்துரைத்த
குரு, வளர்ச்சிக்கு உதவும் நோக்கிலான ஆன்மீக மற்றும் ஒழுக்க ரீதி கண்ணோட்டத்துடன் கூடிய
வழிகாட்டுதல்கள் திருத்தந்தையின் 'Caritas in Veritate' என்ற சுற்றுமடலில் காணக்கிடக்கின்றன
எனவும் தெரிவித்தார்.
மில்லென்னிய வளர்ச்சித் திட்டங்கள் என்பவை நாடுகளுக்கிடையேயான
ஒத்துழைப்பை மட்டுமல்ல, நாடுகளுக்கு உள்ளேயுள்ள சமூக அமைப்புகளின் ஒன்றிணைந்த ஒத்துழைப்பையும்
நாடுகின்றன என மேலும் உரைத்தார் குரு லொம்பார்தி.