உரோமையில் நடைபெற உள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கான ஆயர்கள் மாமன்றம் குறித்து கத்தோலிக்கத்
தலைவர்கள் கருத்து
செப்.22, 2010. வருகிற அக்டோபர் மாதம் உரோமையில் நடைபெற உள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கான
ஆயர்கள் மாமன்றம், அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களின் பிரச்சனைகளை வெளிச்சத்திற்குக்
கொண்டு வரும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தனர் அப்பகுதி கத்தோலிக்கத் தலைவர்கள். ஒருங்கிணைப்பு,
சாட்சிய வாழ்வு என்பவைகளை மையப்படுத்தும் இந்த மாமன்றத்தில் மேய்ப்புப் பணி, இன்னும்
பிற நடைமுறைச் செயல்பாடுகள் அதிகம் பேசப்படும் என்று ஈராக் நாட்டின் கிர்குக் உயர்மறைமாவட்ட
கல்தேயரீதிப் பேராயர் லூயிஸ் சாக்கோ கூறினார். மத்தியக் கிழக்குப் பகுதிகளில் பல்வேறு
கத்தோலிக்க ரீதிகள் இருந்தாலும், முதல் கிறிஸ்தவர்களைப் போல் ஒரே ஆவியில் ஒரே மனத்தினராய்
இருப்பது நமது இன்றையத் தேவை என்று பாக்தாத் நகரின் கல்தேயரீதி துணை ஆயர் Shlemon Warduni
கூறினார்.கீழை ரீதிச் சபைகளுக்கான பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri யுடன்
இம்மாமன்றத்தை வழிநடத்த இருக்கும் சிரியன் கத்தோலிக்க முதுபெரும் தலைவர் Ignace Joseph
III Younan பேசுகையில், மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்தவர்களின் பாரம்பரியங்களையும்,
அவர்கள் இன்று சந்திக்கும் சவால்களையும் உலகிற்கு இந்த மாமன்றம் எடுத்துக் காட்டும் என்று
கூறினார்.