செப்.16,2010. பிரிட்டனில் பயணம்
மேற்கொள்ள தனக்கு விடுத்த அழைப்புக்கும், தற்போதைய வரவேற்புரைக்கும் எலிசபெத் அரசிக்கு
நன்றி கூறி தன் உரையைத் துவக்கிய பாப்பிறை, இத்திருப்பயணத்தின் வெற்றிக்காக உழைத்துவரும்
அனைவருக்கும் தன் நன்றியை வெளியிட்டார்.
ஸ்காட்லாந்தில் உள்ள அதிகாரப்பூர்வ அரச
மாளிகை Holyroodhouse என அழைக்கப்படுவதே, பிரிட்டானிய வாழ்வின் எல்லா தளங்களிலும் கிறிஸ்தவ
மூலம் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. துவக்கக்
காலத்திலிருந்தே அரசர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாகவே இருந்து நற்செய்தியின் ஒளியில் ஆட்சி
புரிந்ததால், மக்களின் சிந்தனை, கலாச்சாரம், மொழி ஆகியவைகளின் முக்கியக் கூறாக கிறிஸ்தவச்
செய்தி இருந்து வருகிறது. இந்நாட்டின் முன்னோர்கள் கொண்டிருந்த உண்மை, நீதி, இரக்கம்
மற்றும் பிறரன்பிற்கான மதிப்பானது, விசுவாசத்திலிருந்து பிறந்ததாகும். சர்வதேச அளவில்
அடிமை வியாபாரத்தைத் தடைசெய்ய பிரிட்டனியர்களின் தலையீடு, எழைகளிடையேயும் நோயாளிகளிடையேயும்
பணியாற்றிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் எடுத்துக்காட்டு, முத்திப்பேறுப்பெற்றவராக இஞ்ஞாயிறன்று
தான் அறிவிக்க உள்ள கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் ஆகியோர் ஒரு சில எடுத்துக்காட்டுக்களே.
நம் காலத்தில் நாத்ஸி கொடுமைகளுக்கு எதிராகப் பிரித்தானியத் தலைவர்கள் எழுந்து நின்றதையும்
நாம் குறிப்பிட்டேயாக வேண்டும்.
65 ஆண்டுகளுக்கு முன்னர்
ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்குவதில் பிரிட்டானியர்கள் ஆற்றிய முக்கிய பங்கு, அயர்லாந்தின்
அமைதிக்காக அவர்கள் ஆற்றிய பணி ஆகியவைகளையும் குறிப்பிடவேண்டும். சர்வதேச அளவில் பொருளாதார
மற்றும் அரசியல் துறைகளில் ஒரு முக்கிய சக்தியாக திகழும் பிரிட்டன், பாரம்பரிய மதிப்பீடுகள்
மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளை மதிப்பதை தொடர்ந்து கடைபிடிக்கட்டும் என வேண்டி, பிரிட்டன்
மக்களுக்கான தன் முதல் உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை.