2010-09-08 15:57:08

திருத்தந்தை இங்கிலாந்து மக்களுக்கு அனுப்பியுள்ள ஒலி ஒளிச் செய்தி


செப்.08, 2010 இம்மாதம் 16 முதல் 19 வரை திருத்தந்தை மேற்கொள்ள விருக்கும் இங்கிலாந்துக்கான திருப்பயணம் நெருங்கி வரும் வேளையில், திருத்தந்தை அந்நாட்டு மக்களுக்கு ஒலி ஒளிச் செய்தி ஒன்றை இப்புதனன்று அனுப்பியுள்ளார்.
இத்திருப்பயணத்திற்காக, கத்தோலிக்கத் திருச்சபை மட்டுமல்லாமல், பிரித்தானிய அரசு, Scotland, London, Birmingham, ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த அதிகாரிகள், பாதுகாப்பு, மற்றும் தொடர்புத் துறையினர் எனப் பலரும் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருவதைத் தான் பெரிதும் பாராட்டுவதாக திருத்தந்தை இச்செய்தியில் கூறியுள்ளார்.
இவை அனைத்திற்கும் மேலாக, இப்பயணம் வெற்றிகரமாக அமையவும், தூய ஆவியின் அருள் வளங்கள் அனைவர் மீதும் பொழியவும் இடைவிடாது வேண்டி வரும் அந்நாட்டு மக்களுக்குத் தன் சிறப்பான நன்றியைக் கூறியுள்ளார் திருத்தந்தை.
செப்டம்பர் 19ம் தேதி ஞாயிறு தன்னால் முத்திபேறு பெற்றவராக அறிவிக்கப்பட விருக்கும் கர்தினால் ஜான் ஹென்றி நியூமனின் எடுத்துக்காட்டான வாழ்வும், அவரது எண்ணங்களும் பலரையும் வழிநடத்த வேண்டுமென்ற தன் ஆவலையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.தன்னை வரவேற்று, சந்திக்க விருக்கும் அரசிக்கும், Canterbury பேராயருக்கும் தன் சிறப்பான நன்றியைக் கூறும் திருத்தந்தை, தனது பயணத்தில் இங்கிலாந்தின் பல இடங்களையும் தன்னால் பார்வையிட முடியாமல் போனாலும் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்குவதாகக் கூறி, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.