குரான் எரிக்கப்பட்டால், எதிரொலியாக, கிறிஸ்தவக் கோவில்
வெடி வைத்துத் தகர்க்கப்படும்
செப்.08, 2010 மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவக் கோவில் வெடி வைத்துத் தகர்க்கப்படும்
என்ற மிரட்டல் கடிதம் ஒன்று அந்தக் கோவில் நிர்வாகிகளை அடைந்துள்ளது. செப்டம்பர் 11,
வருகிற சனிக்கிழமை அன்று அமெரிக்கா ஐக்கிய நாட்டில் குரான் எரிக்கப்பட்டால், அதன் எதிரொலியாக,
இக்கோவில் வெடி வைத்துத் தகர்க்கப்படும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இக்கோவிலைக்
கண்காணித்து வரும் போதகர் Sanjay Solomon இப்புதனன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி
அளிக்கையில், தாங்கள் இந்தக் கடிதத்தைப் பெற்றதும், காவல் துறையினருக்குத் தெரிவித்துள்ளதாகக்
கூறினார். பெயரிடப்படாமல் வரும் இது போன்ற கடிதங்கள் மதங்களுக்கிடையே வெறுப்பை ஏற்படுத்தும்
ஒரு முயற்சி என்று போபால் பேராயர் லியோ கொர்னேலியோ கூறினார்.குரான் எரிப்பு குறித்த செய்தி
வெளியானதும் போபால் மறைமாவட்டப் பகுதிகளில் உள்ள இஸ்லாமியத் தலைவர்களைத் தான் சந்தித்துப்
பேசியுள்ளதாகக் கூறிய பேராயர், இப்போது வந்துள்ள இந்த எச்சரிக்கையை அடுத்து, மீண்டும்
தான் இஸ்லாமியத் தலைவர்களைச் சந்திக்க இருப்பதாகக் கூறினார்.