கான்பூரில் உள்ள புனித பேட்ரிக் ஆலயத்தின் 150வது ஆண்டு கொண்டாட்டங்கள்
செப்.08, 2010 உத்திர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள புனித பேட்ரிக் ஆலயத்தின் 150வது
ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இஞ்ஞாயிறு கருணை ஞாயிறெனக் கொண்டாடப்பட்டது. அன்னை
தெரேசா மறைந்த 13ம் ஆண்டையும் நினைவு கூறும் வண்ணம், இஞ்ஞாயிறு கொண்டாடப்பட்ட கருணை ஞாயிறு
திருப்பலியை அலகாபாத் ஆயர் இசிதோர் பெர்னாண்டஸ் நிறைவேற்றினார். பங்கு மக்களிடமிருந்து
திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, திருப்பலி முடிந்ததும், அப்பகுதியில் உள்ள பல ஏழைகளுக்கு
உணவும், மற்ற பரிசுகளும் வழங்கப்பட்டன. பங்கில் உள்ள ஒரு தொண்டு அமைப்பு, அப்பகுதியில்
உள்ள மிகவும் ஏழையான ஒரு குடும்பத்திற்கு வீடு கட்டித் தர முன் வந்துள்ளது.அன்னை தேரேசாவைப்
போல் நாம் ஒவ்வொருவரும் எளிய வழிகளில் ஏழைகளுக்கு உதவிகள் செய்யும் பழக்கத்தை வளர்த்துக்
கொள்ள வேண்டுமென ஆயர் பெர்னாண்டஸ் கூறினார்.