இந்தோனேசியாவில் எரிமலை புகை கக்குகிறது, மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றம்
ஆக.31,2010. இந்தோனேசியாவில் நானூறு ஆண்டுகளுக்குப் பின் எரிமலை ஒன்று, கடும் புகையைக்
கக்கத் தொடங்கியதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டு,
தற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவின் சுமத்ரா
தீவின் வடபகுதியிலுள்ள "சினபுங்' (Sinabung) என்ற எரிமலை கடந்த சனிக்கிழமை முதல் புகைகளையும்
நெருப்புக் குழம்புகளையும் கக்கத் தொடங்கியது. 6500 அடி உயரத்துக்கு வெப்பம் நிறைந்த
புகைகளை வெளியேற்றிக் கொண்டிருக்கும் இந்த எரிமலை, இத்திங்கள் காலையும் மீண்டும் புகைகளை
வெளியேற்றத் தொடங்கியதால் ஆயிரக்கணக்கில் மக்கள் அப்பகுதியிலுள்ள கிராமங்களை விட்டு வெளியேற்றப்ப்டடு
வருகின்றனர்.
இந்தச் சினபுங் எரிமலை, கி.பி.1600ல் முதலில் அக்னிக் குழம்பைக்
கக்கியது. அதன் பின்னர் தற்சமயம் புகையை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் எரிமலையிலிருந்து
முப்பது கி.மீ. தொலைவிலுள்ள Medan நகரில் மக்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர் என்று செய்திகள்
வெளியாகியுள்ளன. இதுவரை மொத்தம் 21 ஆயிரம் பேர் கூடாரங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.