பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் அதிக உதவிகள் - ஆஸ்திரேலிய
காரித்தாஸ் அமைப்பு அழைப்பு
ஆகஸ்ட் 30, 2010. பாகிஸ்தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் அதிகமாக
உதவ வேண்டி ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஆஸ்திரேலிய காரித்தாஸ் அமைப்பு
அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் இதுவரை தங்கள் வரலாற்றில் கண்டிராத
அளவு அழிவையும், துன்பங்களையும் சந்தித்து வரும் வேளை, அங்கு வந்து சேரும் உதவிகள் சிறுதுளிகளாய்
வந்து கொண்டிருக்கின்றன என்று ஆஸ்திரேலிய காரித்தாஸ் அமைப்பின் இடைக்காலத் தலைவர் ஜேமி
டேவிஸ் (Jamie Davies) கூறினார்.
கத்தோலிக்கத் துயர் துடைக்கும் சேவைகள் என்ற
அமைப்புடன் ஆஸ்திரேலிய காரித்தாஸ் அமைப்பு கடந்த சில ஆண்டுகளாய் பாகிஸ்தானில் பணிபுரிந்து
வருவதையும், 2005ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இவ்வமைப்புகளும்
சேர்ந்து உழைத்ததையும் சுட்டிக் காட்டிய ஜேமி டேவிஸ், தற்போதைய அழிவு மிகப் பெரும் அளவில்
இருப்பதால், இன்னும் உதவிகள் ஏராளமாய்த் தேவைப்படுகின்றன என்று எடுத்துக் காட்டினார்.
இந்த
வெள்ளத்தின் பாதிப்புக்களை படங்கள், செய்திகள் மூலம் தொடர்ந்து பெற்று வரும் ஆஸ்திரேலிய
மக்களின் உதவிகள் அதிகரித்து வருவதையும் டேவிஸ் கூறினார்.