2010-08-26 15:31:29

அன்னை தெரேசாவின் 100வது பிறந்த நாளுக்கான, பிறரன்பு சகோதரிகள் சபை அதிபரின் செய்தி


ஆகஸ்ட் 26, 2010 இதற்கிடையே, அன்பு கூர்தல் மற்றும் அன்பு கூரப்படுவதன் மூலம் கிட்டும் மகிழ்வை அனைவருடனும் பகிர்வதன் வழி அன்னை தெரேசாவின் நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிப்போம் என, அந்நாளையொட்டி வெளியிட்டச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார் அன்னை தெரேசாவின் பிறரன்பு சகோதரிகள் சபை அதிபர் சகோதரி மேரி பிரேமா.
இவ்வியாழனன்று துவக்கப்பட்டுள்ள அன்னை தெரேசாவின் 100வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அன்பிற்கும் புன்னகைக்கும் இருக்கும் சக்தியை நமக்கு மீண்டும் எடுத்துரைப்பதாக இருக்கட்டும் எனத் தன் செய்தியில் கூறியுள்ள இத்துறவு சபை அதிபர், “புன்னகைச் செய்யுங்கள், குடும்ப அங்கத்தினர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்” என்ற அன்னை தெரேசாவின் வார்த்தைகளையும் அதில் மேற்கோள் காட்டியுள்ளார். இறை அன்பால் நிரப்பப்பட்டு, சிறு விடயங்களையும் பெரும் அன்போடு ஆற்றும்போது இறை அன்பை பிறருக்கு எடுத்துச் செல்பவர்களாக நாம் மாறுகிறோம் எனவும் எடுத்துரைத்துள்ள அன்னை தெரேசாவின் பிறரன்பு சகோதரிகள் சபை அதிபர் சகோதரி பிரேமா, புன்னகை மேலும் புன்னகைகளையும் அன்பு மேலும் அன்பையும் உற்பத்திச் செய்கிறது என்ற வரிகளுடன் அச்செய்தியை நிறைவுச் செய்துள்ளார்.







All the contents on this site are copyrighted ©.