ஆக.25,2010. ஒரிசாவில் கிறிஸ்தவர்க்கு எதிராக வன்முறைகள் இடம் பெற்றதன் இரண்டாமாண்டை
இந்திய கம்யூனிஸ்டுகள் உட்பட சுமார் ஐம்பது தன்னார்வ நிறுவனங்களைச் சேர்ந்த குழுக்கள்
இப்புதனன்று நினைவுகூர்ந்தன. இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் பேரணி நடத்திய இக்குழுவினர்,
2008ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இரவு இந்துமதத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்துத்
தொடங்கிய வன்முறையின் நினைவாக, ஆகஸ்ட் 25ம் தேதியை “கந்தமால் தினம்” என்று பெயரி்ட்டுள்ளனர். தொடர்ந்து
ஏழு வாரங்களுக்கு இடம் பெற்ற இவ்வன்முறை, கிறிஸ்தவ சமூகம் மீது நடத்தப்பட்ட மிக மோசமான
வகுப்புவாத வன்முறைகளில் ஒன்றாக இருக்கின்றது என்றும் இக்குழுவினர் கூறினர்.மேலும், இந்துத்
தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட இவ்வன்முறை, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை அடிமைப்படுத்துவதற்குக்
கையாளப்பட்ட நடவடிக்கை என்று, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் புதுடெல்லி சிறப்பு
நீதிமன்றம் இப்புதனன்று கூறியது.