நேபாளத்தில் சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பு ஏற்படுத்துவதற்கு கத்தோலிக்கர் அழைப்பு
ஆக.25,2010. நேபாளத்தில் புதிய அரசு அமைப்பதற்குக் காலம் கடத்தப்பட்டு வருகின்ற வேளை
அந்நாட்டில் சமயச் சார்பற்ற அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்படுவதற்குப் பல சமயத்தவரும் முயற்சிக்குமாறு
நேபாள கத்தோலிக்கர் அழைப்பு விடுத்துள்ளனர். நேபாளத்தின் தேசிய மதமாக இந்து மதத்தை
அறிவிக்க வேண்டுமென்ற போக்கு காணப்படுவதை முன்னிட்டு காத்மண்டில் சுமார் 50 அருள்தந்தையர்கள்,
அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள் இந்து முஸ்லீம் மற்றும் புத்தமதப் பேச்சாளர்களுடன் சேர்ந்து
இவ்விவகாரம் குறித்து கலந்து பேசினர். நேபாள கத்தோலிக்கச் சமூகம், இத்தகைய விவகாரம்
குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகின்றது.உலகின்
ஒரே அதிகாரப்பூர்வ இந்து நாடாக இருந்த நேபாளம் 2006ம் ஆண்டுதான் சமயசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.