அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் புதிய சமூக ஒப்பந்தத்திற்கு அழைப்பு
ஆக.25,2010. இந்த 21ம் நூற்றாண்டுப் பொருளாதாரத்தின் சவால்களைச் சமாளிப்பதற்கு ஒரு புதிய
"சமூக ஒப்பந்தம்" தேவைப்படுகின்றது என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் வருகிற செப்டம்பர் ஆறாம் தேதி கடைபிடிக்கப்படும் தேசிய
தொழில் தினத்தை முன்னிட்டு, "இன்றையப் புதிய பொருள்களுக்கு ஒரு புதிய சமூக ஒப்பந்தம்"
என்ற தலைப்பில் அந்நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவ்வாண்டு
தொழில் தினம், வேலையிழந்துள்ள பல தொழிலாளர்களுக்கு கஷ்டமான நாளாக இருக்கும் என்றுரைத்த
ஆயர் வில்லியம் மர்ப்பி, ஒரு புதிய சமூக ஒப்பந்தம் உருவாக்கப்படுவதன் மூலம் தொழிலாளர்களுக்கும்
வேலையின்றி இருப்போருக்கும் உதவ முடியும் என்றார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏறக்குறைய
ஒரு கோடியே 50 இலட்சம் பேர் வேலையின்றி உள்ளனர் மற்றும் ஒரு கோடியே பத்து இலட்சம் பேர்
பகுதிநேரத் தொழிலாளர்கள் என்று ஆயர் Murphy கவலை தெரிவித்துள்ளார்.ஆயர் Murphy, அமெரிக்க
ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் மனிதவள முன்னேற்றப் பணிக்குழுவின் தலைவராவார்.