2010-08-21 15:51:19

விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றிய ஆயர்கள் திருச்சபைக்குத் தேவை - கர்தினால் Marc Ouellet


ஆக.21,2010. விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றிய ஆயர்கள் திருச்சபைக்குத் தேவை என்று திருப்பீட ஆயர் பேராயத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கர்தினால் Marc Ouellet கூறினார்.

தனது புதிய பணி குறித்து ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த கர்தினால் Ouellet, ஆயர் என்பவர் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சமூகத்தை வழிநடத்த வேண்டியவராய் இருப்பதால் அவர், இறைவார்த்தை மற்றும் தூய ஆவியின் வல்லமையில் நம்பிக்கையுடையவராய் இறைவார்த்தையை போதிப்பதில் திறமையுடையவராய் இருக்க வேண்டும் என்றார்.

ஓர் ஆயர், ஆண்டவரின் ஆவியானவர் தொடும் மனிதரின் இதயங்களோடு பேசுவதற்கும் அரசியல், கலாச்சார மற்றும் சமூகச் சூழலை எதிர்கொள்வதற்கும் திறமையுடையவராக இருக்க வேண்டும் என்றும் கர்தினால் கூறினார்.

திருப்பீட ஆயர் பேராயத்தின் புதிய தலைவராகிய கர்தினால் Marc Ouellet கனடாவின் கியுபெக் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக எட்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.

உலகின் ஆயர்களைத் தேர்ந்தெடுப்பதில் திருத்தந்தைக்கு உதவுவது இவரின் பணிகளில் ஒன்றாகும்.








All the contents on this site are copyrighted ©.