2010-08-18 15:51:07

இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை


ஆக.18,2010 இந்திய - இலங்கை மீனவர்களுக்கு இடையே மீன்பிடித்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்குடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை ராமேஸ்வரத்தில் துவங்கியுள்ளது. இதில் கலந்துகொள்ள 23 பேர் கொண்ட இலங்கை மீனவர் குழு இந்தியா வந்துள்ளது.
இக்கூட்டத்தின் முடிவுகள் இரு அரசுகளிடமும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அதன் பிறகு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை மீனவர் சங்க தலைவர்களில் ஒருவரான அந்தோணி பிள்ளை தெரிவித்தார்.
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஐநூறுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டதாக தமிழக மீனவர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இலங்கையில் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டிருந்த மீன்பிடித்தொழில் தற்போது மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ள நிலையில், தமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை வைத்து அதிக அளவில் மீன் பிடிக்கக் கூடாது என்று இலங்கை மீனவர்கள் விரும்புகின்றனர்.
இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த தென்னிந்திய மீனவர் சங்கங்களுடைய கூட்டமைப்பின் செயலர் விவேகானந்தன், இழுவைப் படகுகள் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படுவதாகவும் இவற்றின் பயன்பாடு குறித்து, இக்கூட்டத்தில் முக்கியமாக பேசப்படும் என்றும் கூறினார்.
மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, இம்மாதம் 20, 21 மற்றும் 22ஆம் தேதிகளில் சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதில் இரு நாட்டு மீன் துறை அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.