பாகிஸ்தானில் பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினருக்கு இன்னும் உதவிகள்
எட்டாக்கனியாகவே உள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.
ஆகஸ்ட் 17, 2010. சர்வதேச அளவிலான உதவி முயற்சிகள் அதிகரித்து வருகின்றபோதிலும் பாகிஸ்தானில்
பெருமழையால் பாதிக்கப்பட்ட 2 கோடி மக்களுள் பெரும்பான்மையினருக்கு இன்னும் உதவிகள் எட்டாக்கனியாகவே
உள்ளதாக கவலையை வெளியிட்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர்.
அல் கொய்தா மற்றும் தலிபான்
குழுக்களுக்கு எதிராக போராடி வரும் பாகிஸ்தான் அரசு, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்
துவங்கிய பெரு மழையின் பாதிப்புகளைச் சமாளிக்கத் திணறி வருவதாகச் செய்தி நிறுவனங்கள்
தெரிவிக்கின்றன.
நாட்டின் ஐந்தில் ஒரு பகுதி மழையால் பாதிக்கப்ப்பட்டுள்ள நிலையில்
பல உதவி அமைப்புகள் உணவு, குடி நீர், முகாம் விரிப்புகள், மருத்துவ உதவிகளை வழங்கிவருகின்றன.
பாகிஸ்தானின்
பெருமழையால் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17 இலட்சம் ஏக்கர் நிலம் தண்ணீரில்
மூழ்கியுள்ளது.
இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டை மீண்டும்
கட்டியெழுப்ப உதவ 90கோடி டாலர் கடனை வழங்க முன் வந்துள்ளது உலக வங்கி.