மருந்துகளுக்கு கட்டுப்படாத புதிய கிருமி பரவுகிறது – மருத்துவ உலகின்
எச்சரிக்கை
ஆகஸ்ட் 12, 2010 மருந்துகளுக்கு கட்டுப்படாத புதிய கிருமி ஒன்று இந்தியா, பாகிஸ்தான்
போன்ற நாடுகளில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருவதாக அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மனிதர்களின்
குடலில் காணப்படுகின்ற இந்தக் கிருமி NDM-1 என்ற என்ஸைமை உருவாக்கக் கூடியது. அதிக சக்திவாய்ந்த
antibiotic நோய் அழிப்பு மருந்துகளுக்குக் கூட இந்தப் புதிய கிருமி கட்டுப்படவில்லை என்று
தெரிவதாக The Lancet என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
இந்தக் கிருமி பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் பல நாடுகளுக்குள்
வந்துள்ளதாக கண்டறியப்பட்டிருந்தாலும், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தான் இந்தக் கிருமி
மிக அதிகமாகப் பரவியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில்
இந்தக் கிருமி சம்பந்தமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் ஆராய்ச்சி மாணவர் டாக்டர் கார்த்திகேயன்
குமாரசாமி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல மனிதர்களின் உடலில் இயல்பாகக்
காணப்படும் ஈ.கோலி போன்ற பாக்டீரியாவே மரபணு மாற்றங்களை அடைந்து மருந்துகளுக்குக் கட்டுப்படாத
வகையிலான கிருமியாக மாறியுள்ளது என்று விளக்கினார்.இந்தக் கிருமி பல்வேறு நாடுகளுக்கும்
பரவுவதைக் கட்டுப்படுத்தாமலும், இந்தக் கிருமியை அழிக்கக்கூடிய மருந்தைக் கண்டுபிடிக்காமலும்
போனால், அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தக் கிருமியால் உலக அளவில் குணப்படுத்த முடியாத நோய்கள்
ஏற்படும் என்று இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டுள்ள அறிவியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.