“மனமிருந்தால் இடமுண்டு” என்ற கூற்று அடிக்கடி பலர் வாயிலிருந்து வெளிவரும். ஆனால், “வாழ்வு
என்று ஒன்று இருந்தால் நம்பிக்கை என்ற ஒன்று இருக்கும்” என்று 23 வயது இளைஞி ஒருவரின்
தந்தை சொல்லியிருக்கிறார். தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், சாரா என்ற 23 வயது இளம்பெண்,
15 மாதங்கள் கோமா நிலையிலிருந்து கடந்த ஏப்ரலில் விழித்தெழுந்தார். அந்த அனுபவத்தை அந்நாட்டு
வானொலியில் பகிர்ந்து கொண்ட அவரின் தந்தை குய்லெர்மோ யெல்டிங், வாழ்வு மீதான நம்பிக்கையைத்
தெரிவித்திருக்கிறார் சாராவின் உடல்நிலையில் இனி ஒருபோதும் எந்த முன்னேற்றமும் இருக்காது
என்று மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், அவர் தனது மகளின் கட்டிலுக்கருகில் நின்று கொண்டு,
“மகளே, நீ எனது செல்ல மகள், நீ எனது வீரமகள், நீ விரைவில் குணமாகுவாய்” என்று நம்பிக்கை
குன்றாதச் சொற்களைச் சொல்லிக் கொண்டே இருந்ததாகக் கூறியிருக்கிறார். பல மாதங்கள் கழித்து
சாரா கண்களையும் கைகளையும் அசைக்கத் தொடங்கிய போது “வாழ்வு என்று ஒன்று இருந்தால் நம்பிக்கை
என்ற ஒன்று இருக்கும், இந்த நம்பிக்கை ஒருநாளும் என்னிலிருந்து மறையாது” என்று கூறியிருக்கிறார்
யெல்டிங்.
ஆன்மீக வாழ்வானது கத்தி முனையில் நடப்பதைப் போன்று கடினமானது. எனினும்
எழுந்திரு, விழித்துக் கொள், நம்பிக்கை இழக்காதே என்கிறார் விவேகானந்தர்.