2010-08-11 15:49:56

தொமினிக்கன் குடியரசு நாட்டின் சாந்தோ தொமிங்கோ உயர் மறைமாவட்டத்தின் 500ம் ஆண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன


ஆகஸ்ட் 11, 2010 தென் அமெரிக்காவில் தொமினிக்கன் குடியரசு நாட்டின் தலைநகர் சாந்தோ தொமிங்கோ உயர் மறைமாவட்டத்தின் 500ம் ஆண்டு கொண்டாட்டங்கள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

வருகிற 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று முடிவடையும் இந்த ஐந்து நூற்றாண்டு கொண்டாட்டங்களை சாந்தோ தொமிங்கோ உயர் மறைமாவட்டத்தின் பேராயர் கர்தினால் Nicolas de Jesus Lopez Rodriguez ஒரு ஆடம்பரக் கூட்டுத் திருப்பலி ஆற்றி துவக்கி வைத்தார்.

1511ம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று அப்போது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் ஜூலியஸ் இந்த மறைமாவட்டத்தை அறிவித்தார் என்பதும், 'புதிய உலகம்' என்று அழைக்கப்படும் தென் அமெரிக்காவின் பல்வேறு நாட்டுத் தலத் திருச்சபைகளில் சாந்தோ தொமிங்கோ முதல் குழந்தை என்று மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் இரண்டு கர்தினால்கள், 32 பேராயர்கள் 43 ஆயர்களைக் கொண்டதாக தொமினிக்கன் குடியரசு திருச்சபை வளர்ந்துள்ளது என்று கர்தினால் Lopez Rodriguez கூறினார்.

இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 2011 ஜூன் மாதம் திவ்ய நற்கருணை மாநாடு ஒன்று நடைபெறும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.