அன்னை தெரசாவின் பெயரில் புதிய ரயில் ஒன்று விடப்பட உள்ளது.
ஆகஸ்ட் 09, 2010. அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக
இரயில் ஒன்றிற்கு அன்னையின் பெயரைச் சூட்ட உள்ளதாக அறிவித்துள்ளார் இந்திய இரயில் துறை
அமைச்சர் மம்தா பானர்ஜி.
அன்னை தெரசாவின் பிறந்த நாளான இம்மாதம் 26ந்தேதி அன்னை
விரைவு இரயில் என்ற பெயரில் துவக்கப்பட உள்ள இந்த இரயில், அன்னை தெரசா சபையினரின் வெள்ளைச்
சேலையின் ஓரம் கொண்டிருக்கும் இளம் நீல நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். அன்னை தெரசாவின்
பெயரிலான இந்த இரயில் இந்தியாவின் முக்கிய நகரங்களைத் தொட்டுச் செல்வதாக இருக்கும் என்றார்
அமைச்சர் மம்தா பானர்ஜி.
ஏழைகளிடையேயானப் பணிகளுக்கென 1979ம் ஆண்டு நொபெல் அமைதி
விருதைப்பெற்ற அன்னை தெரசாவின் 100வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் விதமாக சிறப்பு நாணயத்தை
வெளியிடவும் புதுடெல்லியில் தேசிய கருத்தரங்கு ஒன்றை நடத்தவும் தீர்மானித்துள்ளது இந்திய
அரசு.