“கடவுளைத் தேடி அல்லது பாவங்களுக்குக் கழுவாய் தேடி பாலைவனங்களுக்குச் செல்லத் தேவையில்லை.
நீங்கள் வாழும் இல்லங்களில், உங்கள் குழந்தைகளை கடவுளின் நெறியில் நீங்கள் வளர்க்கும்
போது, நீங்கள் தேடும் இவை அனைத்தையும் கண்டடைய முடியும். ஒவ்வொருவரும் தான் செய்யும்
பணியை இன்னும் நல்ல முறையில் செய்வதே இறைவனுக்கு ஆற்றும் பெரும் சேவை.” இவ்வாறு சொன்னவர்
ஜான் மரிய வியான்னி. Cure d’Ars என்று புகழ்பெற்ற இந்த எளிய குரு தன் வாழ்வை பிரான்சில்
Ars என்ற சிறிய ஊரில் அதிகம் செலவழித்தார். அதுவும் ஒரு நாளின் 24 மணி நேரங்களில் 12
முதல் 16 மணி நேரங்கள் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கும் இடத்திலேயே செலவழித்து, பல ஆயிரம்
மக்களை இறைவனிடம் கொண்டு வந்து சேர்த்தார். 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி புனித
ஜான் மரிய வியான்னி இறையடி சேர்ந்தார். இப்புனிதர் இறந்த 150ம் ஆண்டான 2009ம் ஆண்டை குருக்களின்
ஆண்டாகவும், இப்புனிதரை அனைத்து குருக்களுக்கும் பாதுகாவலர் எனவும் திருத்தந்தை அறிவித்தார்.
ஆகஸ்ட் 4 புனித ஜான் மரிய வியான்னியின் திருநாள்.