கென்யாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புமுறைக்கு எதிராக வாக்களிக்குமாறு
கிறிஸ்தவத் தலைவர்கள் குடிமக்களுக்கு வேண்டுகோள்
ஜூலை31,2010: கென்ய நாட்டில் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புமுறை, அந்நாட்டினரின்
இறையாண்மையை இப்பொழுதும் எப்பொழுதுமே அகற்றிவிடும் என்று சொல்லி அதற்கெதிராய் வாக்களிக்குமாறு
அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட கிறிஸ்தவத் தலைவர்கள் குடிமக்களுக்கு வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
நைரோபியின் திருக்குடும்ப பசிலிக்காவில் இவ்வெள்ளியன்று நடைபெற்ற
கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட இருபதுக்கு மேற்பட்ட கிறிஸ்தவத் தலைவர்கள்
வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள
அரசியல் அமைப்புமுறை நாட்டின் நலனுக்கு ஏற்றதாக இல்லை என்று கூறும் அவ்வறிக்கை, ஒவ்வொரு
கென்யக் குடிமகனும் ஓட்டளிப்பதற்குத் தங்களுக்கிருக்கும் ஜனநாயக உரிமையை செயல்படுத்த
வேண்டுமென்றும், தங்களின் தேசபக்தியை வெளிப்படுத்தி, தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள
அரசியல் அமைப்புமுறைக்கு எதிராய் வாக்களிக்குமாறும் கேட்டுள்ளது.
கென்யாவில் வருகிற
புதனன்று நடைபெறவிருக்கின்ற அரசியல் அமைப்பு குறித்த பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பில்
ஏறக்குறைய ஒரு கோடியே 20 இலட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.