இலங்கையின் வட பகுதி, கிழக்குப் பகுதியில் வாழும் கத்தோலிக்க இளையோரைக்
குறித்து பெற்றோர் தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளனர்
ஜூலை 28, 2010 இலங்கையின் வட பகுதி, மற்றும் கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ் கத்தோலிக்கப்
பெற்றோர் அங்குள்ள தமிழ் கத்தோலிக்க இளையோரைக் குறித்து அப்பகுதியில் பணி புரியும் குருக்களிடம்
தங்கள் கவலைகளை வெளியிட்டுள்ளனர். இலங்கையின் கத்தோலிக்கத் திருச்சபையானது மறைபணிக்
குழுக்களிடமிருந்து தலத் திருச்சபை குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டதை நினைவு கூறும் வண்ணம்
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் தலத் திருச்சபை குருக்கள் நாள் இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட
போது, கத்தோலிக்கப் பெற்றோர் இக்கவலையை வெளியிட்டனர். இளையோரை கத்தோலிக்க வாழ்வில்
வளர்ப்பதற்கு பங்கில் உள்ள அனைவரும் இணைந்து வழிகாட்ட வேண்டும் என்று இரு குருக்களுக்குத்
தந்தையான ஞானமுத்து கூறினார்.இன்றைய இளையோரை நற்செய்தி வழி வாழவைப்பது பெரியதொரு சவால்
என்று உரைத்த யாழ்ப்பாண முதன்மை குரு ஜஸ்டின் ஞானப்பிரகாசம், இந்த பணியில் குருக்களுடன்
குடும்பங்களும் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.