2010-07-17 15:46:42

அமேசான் சமூகநலப் பணியாளர்களுக்குத் திருச்சபை ஆதரவு


ஜூலை17,2010 பெரு நாட்டு அமேசான் காடுகளைப் பாதுகாப்பதற்காக உழைத்து வரும் திருச்சபையின் சமூகநலப் பணியாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

பெரு நாட்டு அமேசான் காடுகளைப் பாதுகாப்பதற்காக உழைத்து வரும் பிரிட்டன் சுற்றுச்சூழல் நடவடிக்கையாளர் அருட்சகோதரர் Paul McAuley நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று அரசு அச்சுறுத்தி இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும் இவ்வேளையில் ஆயர்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர்.

நற்செய்தி அறிவிப்பதோடு, படைப்பைப் பாதுகாப்பதை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியையும் பாதுகாக்க வேண்டியது திருச்சபையின் பணி என்று த்ருஹில்லோ பேராயர் Miguel Cabrejos Vidarte இவ்வெள்ளியன்று நிருபர்களிடம் விளக்கியுள்ளார்.

தெலேசால் சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் Paul, கடந்த இருபது ஆண்டுகளாக பெரு நாட்டில் மறைப்பணியாற்றி வருகிறார்.

இவரது தங்கும் அனுமதியைப் புதுப்பிக்க மறுத்த பெரு அரசு, இவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமென்று இம்மாதம் முதல் தேதி கட்டளை பிறப்பித்தது. எனினும் இவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவுக்குத் தீர்ப்பு கிடைக்கும்வரை இவர் நாட்டில் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.