ஆந்திர மாநிலத்தில் மனித உரிமைகள் கல்வியைப் பரப்புவதற்கு துறவு சபைகளின் அதிபர்கள் திட்டம்
ஜூலை16,2010 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மனித உரிமைகள் கல்விக்கு முக்கியத்துவம்
கொடுப்பதற்கு அம்மாநில சமயத் தலைவர்களும் துறவு சபைகளின் அதிபர்களும் திட்டமிட்டு வருகின்றனர்.
இம்மாதத்தில்
ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில துறவு சபைகளின் அதிபர்களின் 41வது ஆண்டுக் கூட்டத்தில்
கலந்து கொண்ட அறுபதுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், ஆந்திராவில் மனித உரிமைகள் கல்வியைப்
பரப்புவதற்குத் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய ஹைதராபாத்
பேராயர் மாரம்புடி ஜோசி, மறைப்பணி ஆர்வம், அர்ப்பணம், தன்னலமின்மை ஆகியவற்றின் அடிப்படையில்
தலத்திருச்சபையைக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஏழைகள்
எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் களைவதற்கு, மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி வழங்கப்பட
வேண்டியதன் அவசியத்தை இக்கூட்டத்தில் சுட்டிக் காட்டினார் சலேசிய சபைக் குரு தாமஸ் பள்ளித்தனம்.