வானலைக்கொடிகளின் மின்காந்த அலைகள் வழி புற்று நோய் பரவுகிறது என்றக் குற்றச்சாட்டு
உண்மைக்குப் புறம்பானது - வத்திக்கான் வானொலி உயர் இயக்குனர்
ஜூலை 15, 2010 வத்திக்கான் வானொலி வானலைக்கொடிகளின் மின்காந்த அலைகள் வழி புற்று நோய்
பரவுகிறது என்றக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என மீண்டும் ஒருமுறை தன் மறுப்பை
வெளியிட்டுள்ளார் இவ்வானொலியின் உயர் இயக்குனர் குரு. ஃபெதரிக்கோ லொம்பார்தி. இத்தாலிய
நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மருத்துவ ஆய்வு குழு ஒன்று, வத்திக்கான் வானொலி ஒலிபரப்பின்
மின்காந்த அலைகளுக்கும் புற்று நோய்க்கும் தொடர்புள்ளது என அறிவித்துள்ளதைத் தொடர்ந்து
இதற்கு மறுப்புத் தெரிவித்த திருப்பீடப்பேச்சாளரும் வத்திக்கான் வானொலி உயர் இயக்குனருமான
இயேசு சபை குரு லொம்பார்தி, கடந்த காலங்களில் நடத்தப்பட்டுள்ள அகில உலக அறிவியல் ஆய்வுகள்,
வானொலி மின்காந்த அலைகளுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்துள்ளதைச்
சுட்டிக்காட்டினார். சர்வதேச விதிகளுக்கு இயைந்தே எப்போதும் செயல்படும் வத்திக்கான்
வானொலி, 2001ம் ஆண்டு இத்தாலியுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் படி, அருகில் வாழும் மக்களின்
அக்கறைகளைக் கருத்தில் கொண்டு தன் ஒலிபரப்பு முறைகளில் தீவிரக் கட்டுப்பாடுகளைக் கொண்டு
வந்ததையும் நினைவுபடுத்தினார் குரு லொம்பார்தி.வானலைக் கொடிகளின் மின்காந்த அலைகளுக்கும்
புற்றுநோய்க்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை போதிய ஆதாரங்களுடன் மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்க உள்ளதாக வத்திக்கான் வானொலி நிர்வாகம் அறிவித்துள்ளது.