ஜூலை 14 - பிரெஞ்சு புரட்சி ஆரம்பமானதென்றும், ஈராக்கியப் புரட்சி முடிவுக்கு வந்ததென்றும்
வரலாறு சொல்கிறது.
புரட்சி என்ற வார்த்தையில் ‘புரட்டிப் போடுதல்’ என்ற
செயல் புதைந்துள்ளது.
பயிர் விளையும் மண்ணைப் புரட்டிப் போடும் போது, அது இன்னும்
உயிர் பெற, உயிர் தர வாய்ப்புக்கள் அதிகம்.
பாதையை அடைத்து நிற்கும் கல்லைப் புரட்டிப்
போடும் போது, பயணம் தொடர வாய்ப்புக்கள் அதிகம்; கல்லுக்குக் கீழ் மறைந்திருக்கும் நச்சுப்
பூச்சிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வாய்ப்புக்கள் அதிகம்.
பழகிய பாதையிலேயே
ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களைப் புரட்டிப் போடும் போது, புதுமையான எண்ணங்கள் தோன்ற
வாய்ப்புக்கள் அதிகம்.
பல நேரங்களில், புரண்டதை மீண்டும் சரி செய்வதும்
புரட்சிதான்.
சமுதாயம் தடம் புரண்டு, தறி கெட்டுப் போகும் போது, மீண்டும் அதைப்
புரட்டிப் போட்டு, சீரிய வழிக்குக் கொண்டு வருவதும் ஒரு புரட்சிதான்.
புரட்சி
என்றதும், கத்தி, இரத்தம் என்ற அச்சம் தேவையில்லை. கத்தியின்றி, இரத்தமின்றி புரட்சிகள்
வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. இன்றும், இடம் பெற்று வருகின்றன. இனியும் இடம் பெறும். நம்புவோம்.