ஜூலை, 07, 2010. இப்புதன் மாலை முதல் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருத்தந்தையர்களுக்கான
கோடை விடுமுறை இல்லமிருக்கும் Castel Gondolfoவுக்கு ஓய்வெடுக்கச் செல்வதால், இம்மாதத்தின்
முதல் புதன் கிழமையான இன்று இடம் பெற்ற இப்பொது மறை போதகமே, இம்மாதத்தின் ஒரே மறை போதகமாக
இருக்கும்.
இம்மாதத்தின் 14, 21, 28 தேதிகளில் புதன் பொது மறைபோதகங்கள் இடம்
பெறாது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செய்தியே. உரோம் நகருக்கு தெற்கே சுமார் 25
கிலோ மீட்டர் தொலைவிலுள்ள Castel Gondolfoவில் ஓய்வெடுக்கச் செல்லும் திருத்தந்தை ஆகஸ்ட்
மாதம் 4ம் தேதிதான் அடுத்த புதன் பொது மறைபோதகத்தில் கலந்து கொள்வார்.
இப்புதனன்று
நம் திருத்தந்தை வழங்கிய மறைபோதகமானது, மத்திய காலக் கிறிஸ்தவக் கலாச்சாரத்திற்குக் குறிப்பிடத்தக்க
பங்காற்றிய பிரன்சிஸ்கன் இறையியலாளர் முத்திபேறுபெற்ற John Duns Scotus பற்றியதாக இருந்தது.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த இந்த இறையியலாளர் Oxford, Cambridge, மற்றும் Paris பல்கலைக்
கழகங்களில் கல்வி கற்பித்துள்ளார் எனத் தன் உரையைத் துவங்கினார் பாப்பிறை.
கிறிஸ்துவ சிந்தனையானது
மூன்று வெவ்வேறு துறைகளில் வளர்ச்சி காண்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியதன் வழியாக,
இன்று சிறப்பான விதத்தில் அறியப் படுகிறார் இறையியலாளர் Duns Scotus. இதில் முதன்மையானது
என்னவெனில், கடவுள் மனுவுரு எடுத்ததற்கு ஆதாமின் பாவம் நேரடிக் காரணமல்ல, மாறாக, ஒவ்வொரு
படைப்பும் கிறிஸ்துவிலும் கிறிஸ்து வழியாக அருட்கொடையில் முழுமை பெறவும் என்றென்றும்
இறைவனைப் புகழவுமான இறைத் தந்தையின் படைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதே. கிறிஸ்துவை
மையமாகக் கொண்ட இந்த கண்ணோட்டத்தில், மனு உருவான வார்த்தையாம் இறைவன் வரலாறு மற்றும்
அகில உலகங்களின் மையமாகத் தோன்றுகிறார்.
இரண்டாவதாக, நம் அன்னைமரி ஜென்மப் பாவத்திலிருந்து
விலக்குப் பெற்றவராகக் காப்பாற்றப்பட்டது, அவர் மகனாம் இயேசுவின் மீட்பளிக்கும் பாடுகள்
மற்றும் மரணத்தையொட்டி அன்னைக்கு வழங்கப்பட்ட சலுகையே என வாதித்தார் Scotus. அன்னையின்
அமல உற்பவம் குறித்த திருச்சபை படிப்பினைகளின் விளக்கத்தில் இந்த இறையியலாலரின் இக்கருத்தும்
முழுமை பெற்றது.
இறுதியாக, இறையியலாளர் Duns Scotus மனித விடுதலை குறித்தவைகளில்
முக்கிய கவனம் செலுத்தினார். பிற காலத்திய இறையியல், விடுதலையை உண்மையுடனான அதன் தொடர்பிலிருந்து
பிரித்தெடுக்கும் தவறைச் செய்ய முயன்றாலும், Duns Scotus இறையியல் போக்கில் விடுதலை குறித்த
விதைகளை விதைத்தார்.
இயேசுவில் தன்னை வெளிப்படுத்திய
இறைவனுக்கு நம்மைத் திறப்பதன் வழி, நாம் மகிழ்வை, விடுதலையை, முழுமையை அடைய முடியும்
என்பதைப் புரிந்து கொள்ள நமக்கு, முத்திபேறுபெற்ற John Duns Scotusன் படிப்பினைகளும்
வாழ்க்கை வழிகாட்டுதலும் உதவட்டும் என்று தன் புதன் பொது மறைப் போதகத்தை நிறைவு செய்த
திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.