2010-07-06 14:46:35

ஸ்பெயின் நாட்டில் கருக்கலைத்தல் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதைக் குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.


ஜூலை 06, 2010. ஸ்பெயின் நாட்டில் இத்திங்கள் முதல் கருக்கலைத்தல் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதைக் குறித்து கவலையை வெளியிட்டுள்ள அந்நாட்டு ஆயர்கள், ஒரு நீதியான மனக்குரலுக்கு எதிராகச் செல்வதாக இது உள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.

கரு உருவான 14 வாரங்களுக்குள் அதை பிறக்க விடுவதா அல்லது கொல்வதா என முடிவெடுக்கும் உரிமையைக் கருவைச் சுமக்கும் தாய்க்கு வழங்குவது என்பது பிறக்கவிருக்கும் உயிர்களுக்கான பாதுகாப்பை மறுப்பதாகும் என கவலையை வெளியிட்டுள்ளனர் ஆயர்கள்.

கருக்கலைத்தலைச் சட்ட ரீதியாக நியாயப்படுத்த முயலும் நலப்பிரச்சனைகள் தெளிவுப்படுத்தப்படாத ஒன்றாக உள்ளது என்பது குறித்த அக்கறையும் ஸ்பானிய ஆயர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கருவில் வளரும் குழந்தைகளுக்கான வாழும் உரிமை, கருக்கலைத்தலுக்குத் தள்ளப்படாத வண்ணம் சமூக உரிமைகளைப் பெறுவதற்கான தாய்மார்களின் உரிமை, உரிமைகளோடு அநீதியைக் குழப்பாத நீதியானச் சட்டங்களைக் கொண்டிருப்பதற்கான மக்களின் உரிமை ஆகியவைகளுக்காகவே சமூகத்தில் தங்கள் குரலை எழுப்ப விரும்புவதாக ஸ்பெயின் நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.