2010-07-05 15:54:53

ஜூலை 05. நாளும் ஒரு நல்லெண்ணம்


இறைவன்.

எங்கோ இருக்கிறான் என்பதை விட எங்கும் இருக்கிறான் என்பதே சிறப்பு.

முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் நம்புகிறேன். அவனுக்காக கத்தவோ, சண்டையிடவோ, சாகவோ, சாகடிக்கவோ நான் தயாரில்லை. ஏனெனில் அவனுக்காக வாழத்தான் என்னைப் படைத்திருக்கிறான்.

எனக்குத் தெரிந்ததை என் வழியில் தான் நான் அவனுடன் பேசுகிறேன்.

வார்த்தை அலங்காரங்களில் அவன் மயங்குவதில்லை. குழந்தையின் மழலை தரும் மகிழ்ச்சி, இலக்கியங்கள் கூட தருவதில்லைதானே.

நான் முட்டிப்போட்டுப் பேசுவதில்லை. நேரம் கிடைக்கும்போதெல்லாம், ஏன், வேலையினிடையே கூட பேசுகிறேன்.

பலவேளைகளில் நான் பேசுவதேயில்லை. அவன் குரலுக்குச் செவிமடுப்பதிலையே என் ஜெபம் தொடர்கிறது.

நாங்கள் இருவரும் எதைப்பற்றிப் பேசுவோம்?

என்னைப்பற்றியா? அவனைப்பற்றியா? இல்லவே இல்லை.

என் குடும்பம் பற்றி, நான் வாழும் இவ்வுலகம் பற்றி, என் கடமைகள் பற்றிப் பேசுகிறோம்.

எல்லாம் கடந்த அவன் என்னைக் கடந்து போக விடுவதில்லை.

"அவன்" என அழைக்கத் தந்த உரிமையே எம் உறவின் அடையாளம்.








All the contents on this site are copyrighted ©.