இலங்கையின் வரலாறு மற்றும் புவியியல் பாடப்புத்தகங்கள் திருச்சபைக்கு எதிரான அவதூறானக்
கருத்துக்களைக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் கொழும்பு பேராயர்.
ஜூலை 05, 2010. இலங்கையின் இன்றைய மணவர்களுக்கான வரலாறு மற்றும் புவியியல் பாடப்புத்தகங்கள்
திருச்சபைக்கு எதிரான அவதூறானக் கருத்துக்களைக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்
கொழும்பு பேராயர் மால்கம் ரஞ்சித்.
திருத்தந்தைக்கும் திருச்சபைக்கும் கத்தோலிக்கர்களுக்கும்
எதிரானக் கருத்துக்களை மாணவர்களின் பாடப்புத்தகத்தில் புகுத்துவது மத சமூகங்களிடையே மோதல்களை
உருவாக்கும் முயற்சி என இலங்கைக் கல்வித் துறை அமைச்சர் பந்துலா குணவர்த்தனாவிடம் கூறினார்
பேராயர்.
திருச்சபைக் குறித்த தவறான எண்ணங்களை இது மாணவர்களின் மனதில் புகுத்துவதுடன்
இலங்கை அரசின் நம்பகத்தன்மைக் குறித்தக் கேள்வியையும் எழுப்பும் என அமைச்சரிடம் கூறிய
கொழும்பு பேராயர், மதங்களிடையேயான ஒரு குழுவைக் கொண்டு இப்பாடப் புத்தகங்களை மறுபரிசீலனைச்
செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு தேவையான
நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளாரென கத்தோலிக்கக் கல்விக்கான
தேசிய இயக்குனர் குரு இவான் பெரேரா தெரிவித்தார்.