விரைவு நீதி மன்றம் மனோஜ் பிரதானுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துள்ளதை
ஒரிசா தலத் திருச்சபை பெரிதும் வரவேற்றுள்ளது
ஜூலை 01, 2010 ஒரிசாவின் கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்த
வன்முறைகளின் போது, பரிகிதா நாயக் என்ற கிறிஸ்தவரைக் கொலை செய்த குற்றத்திற்காகவும்,
இன்னும் பிற குற்றங்களுக்காகவும் மனோஜ் பிரதான் என்ற சட்ட சபை உறுப்பினருக்கு இச்செவ்வாயன்று
விரைவு நீதி மன்றம் ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்துள்ளதை ஒரிசா தலத் திருச்சபை
பெரிதும் வரவேற்றுள்ளது. இந்தக் கொலைக் குற்றத்தை நேரில் கண்டதால், துணிந்து முன்
வந்து சாட்சி சொன்னதற்கு ஏற்ற பலன் கிடைத்ததெனவும், இனி தன் உயிரே போனாலும், நீதிக்காகக்
குரல் கொடுக்க தான் எப்போதும் தயங்கப் போவதில்லை எனவும் பரிகிதாவின் மனைவி கனகா ரேகா
நாயக் கூறினார்.குற்றவாளிகள் பல நாட்கள் தப்பித்தாலும், ஒரு நாள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்
என்பதற்கும், நீதித் துறையின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை வளர்வதற்கும் இந்தத் தீர்ப்பு
பெரும் உதவியாக இருக்கும் என்று கட்டக் புபனேஸ்வர் உயர் மறைமாவட்ட பேராயர் ரபேல் சீனத்
கூறினார்.