ஜூன் 30, 2010.குருக்களுக்கென அர்ப்பணிக்கப்பட்ட
சிறப்பு ஆண்டின் கொண்டாட்டங்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இப்புதனன்று இத்தாலியின் புனிதர்
குரு ஜோசப் கஃபாசோ குறித்து மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புனித
கஃபாசோ மறைமாவட்ட குருக்களின் பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரிடம் பயின்ற
புனித குருக்களுள் புனித ஜான் போஸ்கோவும் ஒருவர். இவர் புனித போஸ்கோவின் ஊரான காஸ்தல்
நுவோவோ தி ஆஸ்தி எனுமிடத்தில் 1811ம் ஆண்டு பிறந்தார். இவரின் சகோதரி மரியன்னாவின் மகனான
முத்திப்பெற்ற ஜோசப் அல்லமானோ என்பவரே கொன்சொலாத்தா மறைபரப்பு சபையின் நிறுவனர் ஆவார்.
புனித கஃபாசோ ஓர் இறைமனிதராக வாழ்ந்து தன் தினசரி வாழ்வு நடவடிக்கைகளை இறைவனுக்கென ஒப்புக்கொடுத்தார்.
குருக்களுக்கு நல்பயிற்சி கொடுத்து உருவாக்குபவராய், ஏழைகளின் தேவையை உணர்ந்து சேவையாற்றுபவராய்,
மரணதண்டனைக் கைதிகளின் அருகிருந்து ஆறுதல் கூறுபவராய் இருந்த புனித கஃபாசோவின் எடுத்துக்காட்டான
வாழ்வு அனைத்து குருக்களுக்கும் நற்செய்திக்கான விசுவாசமுள்ள சாட்சியாய் விளங்குவதற்கான
வலிமையைத் தருவதாக எனப் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, இச்செவ்வாய் புனித
பேதுரு மற்றும் பவுல் திருவிழாத் திருப்பலியில் தன்னால் பாலியம் வழங்கப்பட்ட 38 பேராயர்களுக்கும்
இப்பொதுமறைபோதகத்தில் அவர்களுடன் பங்குபெறும் பேராயர்களின் உறவினர்களுக்கும் தன் வாழ்த்துக்களையும்
வழங்கினார்.
புதன் மறைபோதகத்தின்
இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.