2010-06-24 15:59:03

பிறரன்பு மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் - திருத்தந்தை


ஜூன்24,2010 திருச்சபை நிறுவனங்களில் நலிந்த மக்களுக்குத் தனியாகவும் குழுவாகவும் செய்யப்படும் பிறரன்புப் பணிகளும் பிற நடவடிக்கைகளும் எப்பொழுதும் இறைவனின் பராமரிப்பின் தெளிவான வெளிப்பாடுகளாக அமைகின்றன என்று இவ்வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
உரோம் நகரில் Monte Mario என்ற குன்றின் உச்சியில் வைக்கப்பட்டுள்ள அன்னைமரியா திருவுருவத்தை மந்திரித்த பின்னர் அவ்விடத்திலுள்ள Don Orione அநாதைகள் மற்றும் மாற்றுத்திறனுடையோர் மையத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிறரன்பு மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் என்ற புனித குரு ஓரியோனேயின் சொற்களையும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு வரவேற்புரை வழங்கிய உரோம் நகர மேயர் Gianni Alemanno வுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை, இம்மாதம் 29ம் தேதி உரோம் நகரம், தனக்கென இன்னிசைக் கச்சேரி நடத்தி அதன்மூலம் தன்மீது கொண்டிருக்கும் அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தவிருப்பதற்கு முன்கூட்டியே நன்றியும் கூறினார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் உரோம் நகரம் தாக்குதலுக்கு உள்ளான போது மக்கள் அன்னைமரியாவுக்கு கொடுத்த வாக்குறுதியின் பயனாக, 1953ம் ஆண்டில் Monte Mario குன்றின் உச்சியில் இறையன்பு அன்னைமரியா திருவுருவம் வைக்கப்பட்டது. இது அண்மையில் ஏற்பட்ட கடும் காற்றால் சேதமடைந்ததினால் மீண்டும் சீரமைக்கப்பட்டது. இவ்வியாழனன்று திருத்தந்தை அதை மந்திரித்தார்.உரோம் மக்கள் இந்த இறையன்பு அன்னைமரியா மீது கொண்டிருக்கும் பக்தியை, 1944ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதர், இத்திருவுருவம் முன்னிலையில் வெளிப்படுத்தினார். இந்நாளில்தான் உரோம் நகர் விடுதலையடைந்தது.







All the contents on this site are copyrighted ©.